சென்னை, செப். 2- வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகிய வற்றில் தமிழில் பெயர் பலகை இல்லை யென்றால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணை ஓரிரு நாட்க ளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அரசு அலுவல கங்கள், கடைகள் ஆகியவற்றில் தூய தமிழில் தான் பெயர் பலகை இருக்க வேண்டும் என தமிழக அரசு 1980களிலும், 90களிலும் உத்தரவிட்டது. இதுதொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, அன்றைய காலக்கட் டங்களில் தமிழகம் முழுவதும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை கள் மாற்றப்பட்டன. உதாரணத்திற்கு டீ கடை என்பது தேநீர் கடை என்றும், ஓட்டல் என்பது உணவகம் எனவும் மாற்றப்பட்டன.
மேலும், ஆங்கிலத்தில் பெயர் வைக்க விரும்பினால் அது தமிழ் பெயருக்கு அடுத்த தாக இடம்பெற வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டிருந்தது. இதையும் வணிகர்கள் கடைப்பிடித்து வந்தனர். இதனிடையே, ஆண்டுகள் செல்ல செல்ல இந்த நடைமுறையை பல வணிக நிறுவன உரிமையாளர்களும், கடைக்காரர்களும் அலட்சியம் செய்யத் தொடங்கினர். இதனால் தற்போது பல கடைகளில் பெயர் தமிழில் இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவன ங்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, தமிழில் பெயர் பலகை வைக்காத வணிகர் களிடம் இதுவரை ரூ.50 மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த அபராதத்தை ரூ. 2,000ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை ஓரிரு நாட்களில் வெளியாகும் என அரசு வழக்கறிஞர் கூறி னார். இதனை குறித்துக் கொண்ட நீதிபதி, இதுவரை தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை வணிக நிறுவனங்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனக் கூறி இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.