திருவனந்தபுரம், ஜன. 25- கேரளத்தில் கடந்த ஏழரை ஆண்டுகளில் 7,000 பழங்குடியினருக்கு 6,000 ஏக்கர் நிலம் சொந்தமாக்கப்பட்டதாகவும், நிலங்களை ஆவணப்படுத்தும் வருவாய் துறையின் ‘எனது நிலம்’ திட்டத்திற்கு மக்களது அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். வருவாய்த் துறையின் ரெவன்யூ பவன் அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மேலும் பேசியதாவது: கேரளத்தில் நிலமற்றோர் குறித்த விவரம் பல்வேறு வழிகளில் சேகரிக்கப்படுகின்றன.
அவற்றின் அடிப்படையில் நிலமற்றோருக்கு நிலம் வழங்கவும், நில உடமையாளர்களாக மாற்றுவதும் சாத்தியமாகும். இதில் உபரி நிலம் குறித்த விவரங்கள் தாலுகா நில வாரியத்தில் உள்ளன. அத்தகைய நிலங்கள் மீதான முடிவுகளை எடுக்க உரிய நேரத்தில் முயற்சி மேற்கொள்ளப்படும். இங்கு மிகவும் சிரமத்தை அனுபவிப்பது பழங்குடி மக்களாவர். கடந்த ஏழரை ஆண்டுகளில் சுமார் ஏழாயிரம் பழங்குடி மக்களுக்கு ஆறாயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாக்குவது சாத்தியமானது. இதுபோல் நில வங்கி திட்டத்தின்படி பல்வேறு மாவட்டங்களில் பழங்குடியினருக்கு வழங்க சுமார் 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. மேலும் 21 ஏக்கர் நிலம் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதோடு 7,693 ஏக்கர் வனநிலம் விநியோகம் செய்வதற்கான ஒன்றிய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரம் ஏக்கர் வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 3,647 பழங்குடியினர் இதன் மூலம் பயனடைகிறார்கள். மலப்புறம் மாவட்டத்தில் திங்களன்று (ஜன.22) 570 பழங்குடியினருக்கு நிலம் வழங்கப்பட்டது. நிலம் வழங்கப்படுவது போன்றே முக்கியமானது சரியான நில ஆவணம் வழங்குவதுமாகும். 2016 இல் எல்டிஎப் அரசால் மறுநிலஅளவை (ரீசர்வே) மேற்கொள்ளப்பட்டது.
அது உரிய முறையில் நடைபெறவில்லை என்பதை தெரிந்துகொண்டு டிஜிட்டல் ரீசர்வே மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எனது நிலம் என்கிற டிஜிட்டல் ரீசர்வே குறித்து இந்த விழாவின் தலைவர் பேசினார். இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரீசர்வேயின்போது கடந்த காலங்களில் என்ன குறைபாடுகள் ஏற்பட்டனவோ அவற்றை எல்லாம் சரிசெய்து குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்யப்படும். நவீன தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்கிட அரசு திட்டமிட்டுள்ளது.
கிராம அளவில் மக்கள் குழுக்கள்
பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண கிராம அளவிலான மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறையினரும் மக்கள் பிரதிநிதிகளும் கூட்டாக விவாதிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரிதான் இந்த குழுவின் தலைவர். துணை வட்டாட்சியர், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் இதில் உறுப்பினர்கள். சட்டமன்ற உறுப்பினரது கட்சியின் பிரதிநிதி, அரசால் நியமிக்கப்படும் ஒரு நபர், பட்டியல் சாதி, பழங்குடியின பிரதிநிதிகள் கிராம அளவில் மக்கள் குழுவில் உறுப்பினர்களாவர். சமூகத்தில் பல்வேறு தரப்பையும் உள்ளடக்கியதாக இந்த குழு இருக்கும்.
ஊழலுக்கு காரணமாகும் பேராசை
ஊழல் குறைவான மாநிலம் என்கிற நற்பெயர் இப்போது கேரளத்துக்கு கிடைத்துள்ளது. இதனால் நாம் திருப்தி அடைந்துவிட முடியாது. முழுமையாக ஊழல் இல்லை என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஊழல் குறைவு என்றால், எங்கோ சில இடங்களில் ஊழல் இருக்கிறது என்பதே பொருள். மனிதனின் பேராசையே ஊழலுக்கு காரணம் என அண்மையில் நான் கூறியது நல்ல விதமாக கவனம் பெற்றுள்ளது. இது கடந்த ஏழரை ஆண்டுகளாக நான் கூறிவருவதாகும். எவர் முன்பும் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்பதால்தான் அவ்வாறு கூற முடிகிறது. இந்த அமைச்சரவைக்கும் எங்கள் எல்லோருக்கும் உள்ள சிறப்பே அதுதான்.
ஊழல் குறைவான மாநிலம் என்கிற நற்பெயர் இப்போது கேரளத்துக்கு கிடைத்துள்ளது. இதனால் நாம் திருப்தி அடைந்துவிட முடியாது. முழுமையாக ஊழல் இல்லை என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஊழல் குறைவு என்றால், எங்கோ சில இடங்களில் ஊழல் இருக்கிறது என்பதே பொருள். மனிதனின் பேராசையே ஊழலுக்கு காரணம் என அண்மையில் நான் கூறியது நல்ல விதமாக கவனம் பெற்றுள்ளது. இது கடந்த ஏழரை ஆண்டுகளாக நான் கூறிவருவதாகும். எவர் முன்பும் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்பதால்தான் அவ்வாறு கூற முடிகிறது. இந்த அமைச்சரவைக்கும் எங்கள் எல்லோருக்கும் உள்ள சிறப்பே அதுதான்.