உத்திரபிரதேசத்தில் லவ்ஜிகாத்துக்கு எதிரான அவசர சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெண்கள் காதலித்து மாற்று மதத்தினரை மதம் மாறி திருமணம் செய்து கொள்வதற்கு அரசியல் அமைப்பு சட்டம் அனுமதி அளித்துள்ளது. இந்து பெண்கள் மதம் மாறி திருமணம் செய்து கொள்ள அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி உள்ள இந்த உரிமையை ஆர்எஸ்எஸ், பாஜகவினர் லவ்ஜிகாத் என்று கூறி தொடர்ந்து ஆங்காங்கே கலவரத்தை தூண்ட முயற்சித்து வந்தனர். இந்நிலையில் சமீபகாலமாக பாஜக ஆளும் மத்தியபிரதேசம், அரியானா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் லவ்ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவசர சட்டத்தை உருவாக்க உத்திரபிரதேச முதல்வர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாநில சட்டக் கமிஷன் புதிய மசோதா தயாரித்து அரசுக்கு அனுப்பியது.
இதன் அடிப்படையில் மாநில அரசு கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் லவ் ஜிஹாத்துக்கு எதிரான அவசர சட்டத்தை கொண்டு வருகிறது. இந்த அவசர சட்டத்துக்கு உ.பி. அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதன்படி, பெண்களை கட்டாயமாக மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் லவ் ஜிஹாத்தில் ஈடுபடும் ஆண்கள் சட்டப்படி தண்டனைக்குள்ளாவர். இந்த அவசர சட்டம் தொடர்பான மசோதா உத்திரபிரதேச சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல்செய்யப்பட்டு நிறை வேறியபின் முறைப்படி சட்ட மாக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.