உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தானி பாடல்களை கேட்டதற்காக இஸ்லாமிய சிறுவர்கள் மீது அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேமாநிலம் பரேலி மாவட்டத்தின் பூட்டா பகுதியில் உள்ள சிங்கை முரவான் கிராமத்தைச் சேர்ந்த நயீம், முஸ்கீம் ஆகியோர் பாகிஸ்தான் குழந்தை நட்சத்திரமான ஆயத் ஆரீஃப்பின் ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ பாடலை கேட்டுள்ளனர்.
பாகிஸ்தானை புகழ்ந்து பாடும் பாடல்களை ஒலிக்கச் செய்வதற்கு உள்ளூர்வாசி ஆஷிஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார் . அவர் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.
அந்த பாடல்களை ஒலிக்க செய்ததற்கு ஆஷிஷ் எதிர்ப்பு தெரிவித்தபோது, சிறுவர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதை அவர் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பின்விளைவுகளை உணராமல் சிறுவர்கள் அந்த பாடலைக் கேட்டுள்ளனர் என்று அவர்களின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 13 ஆம் தேதி மாலை அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு சிறுவனின் உறவினரான சதாம் ஹுசைன், “எனது இளைய சகோதரன் தவறுதலாக அந்த பாடல் ஒலித்துள்ளான், அதுவும் வெறும் 40 வினாடிகள். இதற்காக அவன் மன்னிப்பும் கோரியுள்ளான். ஆனால் அந்த மன்னிப்பு ஏற்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
சிறுவனின் அத்தை சஹானா, “நான் மளிகைக் கடையை விட்டு வெளியேறிய சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தவறுதலாக இசைக்கப்பட்ட ஒரு பாடலிற்காக இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. சிறுவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் நயீம் மற்றும் முஸ்கின் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 153 (தேசிய ஒருமைப்பாட்டிற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுதல்), 504 (வேண்டுமென்றே அவமதித்தல்), 506 (அச்சுறுத்தலை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.