உத்தரகண்ட் மாநிலத்தில், 19 வயது இளம் பெண்ணை கொலை செய்த வழக்கில் அம்மாநில பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் புல்கித் ஆரியா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில், பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா, ரிஷிகேஷ் அருகே வனாந்த்ரா என்ற பெயரில் ஓய்வு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். இந்த விடுதியில் அன்கிதா பண்டாரி (19 வயது) வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த திங்கள் கிழமையிலிருந்து அங்கிதா காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கால்வாய் ஒன்றில், அன்கிதாவின் உடல் சடலமாக இன்று கண்டெடுக்கப்பட்டது. இதை அடுத்து, அங்கிதாவின் சடலம், உடல்கூற் ஆய்வுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் அங்கிதா வேலை பார்த்த விடுதியின் உரிமையாளர் புல்கித் ஆர்யாவுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, புல்கித் ஆர்யா, அவரது விடுதி மேலாளர் சவுரப் பாஸ்கர் மற்றும் உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் புல்கித் ஆர்யாவிற்குச் சொந்தமான வனாந்த்ரா ஓய்வு விடுதியை இடிக்க அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். இந்த சூழலில், அப்பகுதி மக்கள் விடுதிக்கு தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.