states

சட்டமன்ற வளாகப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

டேராடூன், பிப். 6 - பொது சிவில் சட்டத்தை உத்தரகண்ட் மாநிலத்தில் அமல்படுத்தியே தீருவோம் என்று உத்தரகண்ட் மாநில பாஜக அரசு, கடந்த  சில ஆண்டுகளாகவே கூறிவந்தது.  அதன்படி,  பொது சிவில் சட்ட மசோதாவை சட்டப்பேரவை யில் செவ்வாயன்று தாக்கல் செய்துள்ளது. உத்தரகண்ட் மாநில முதல்வராக, பாஜக-வைச் சேர்ந்த புஷ்கர் சிங் தாமி மீண்டும் பொறுப்பேற்ற போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலும், உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்த பாஜக அரசு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய்வதாக தெரிவித்தது.

இந்த குழுவில் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் சத்ருஹன் சிங், டூன் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா தங்வால், சமூக செயற்பாட்டாளர் மனு கவுர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழு முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பொது சிவில் சட்ட மசோதா தயார் செய்யப்பட்டு மாநில அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.  இதனையடுத்து செவ்வாயன்று பொது சிவில் சட்ட மசோதாவை உத்தரகண்ட் சட்ட மன்றத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து, பொது சிவில்  சட்ட மசோதா மீது உத்தரகண்ட் சட்டப்பேரவை யில் விவாதமும் துவங்கியது. பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் மற்றும் விவாதத்தையொட்டி, உத்தரகண்ட் சட்டமன்ற வளாகப் பகுதியில் 144 தடை உத்தரவையும் பாஜக அரசு பிறப்பித்தது.