சந்திரயான் – 3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை குறித்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் -3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23 அன்று நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றின் செயல்பாடுகளை தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், லேண்டர், ரோவர் எடுத்த புகைப்படங்கள் வெளியிட்ட இஸ்ரோ தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் தரையிறங்கிய வீடியோவையும் வெளியிட்டது.
இந்த நிலையில், சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் ஞாயிற்றுக்கிழமை (ஆக.27) நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலை குறித்த ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அது குறித்த தகவலை லேண்டர் அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் இறங்கிய லேண்டரில் சென்ற ChaSTE(Chandra’s Surface Thermophysical Experiment) கருவி வெப்பநிலை குறித்த ஆய்வுப் பணியை தொடங்கியது.
நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் வெப்பநிலையின் சுயவிவரங்களை ஆய்வு செய்கிறது.நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் 10 செ.மீ ஆழம் வரை ஊடுருவி ஆராயக்கூடிய திறன் கொண்டது.
வெப்பநிலை பரிசோதனை கருவியில் உள்ள 10 சென்சார் கருவிகள் வெப்பநிலையை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நிலவின் வெப்பநிலை மாற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ வெளியிட்டுள்ள வரைபடத்தில் நிலவின் மேற்பரப்பு, மேற்பரப்புக்கு அருகில் பல்வேறு ஆழங்களில் நிலவின் வெப்பநிலை மாறுபாடுகளை விளக்குகிறது.
இது நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய லேண்டர் ஆய்வு செய்து அனுப்பிய முதல் தகவல் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.