science

img

தென் துருவத்தில் இறங்கியது இந்தியா

வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது விக்ரம் லேண்டர்

விஞ்ஞானிகள், தலைவர்கள், மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

பெங்களுர், ஆக.23- நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.  இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள 4வது நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்றுள்ளது.  தனது விண்வெளி அறிவியல் பயணத்தில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. சந்திரயான் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியைத் தெரிவித்த இஸ்ரோ தலைவர் “இந்தியா நிலவில் உள்ளது” என்று அறிவித்தார். நிலவினை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அப்போது பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், “திட்டமிட்டபடி விண்கலம் பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான்-3 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் மீண்டும் அது மிகவும் வலுவான ஒரு விண்கலம் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

படிப்படியாக உயரம் குறைப்பு 

இதனைத் தொடர்ந்து ஆக.1-அன்று புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் வகையில் சந்திரயான் 3 ன் பயணப் பாதை மாற்றப்பட்டது. தொடர்ந்து 5 நாள் பயணத்துக்கு பின் கடந்த  ஆக. 5 அன்று நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது. ஆக.17அன்று  பிற்பகல் 1.15 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தில் லேண்டர் பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலவுக்கு 153 ஓ 163 கி.மீ. தொலைவில் ரோவர் பயணித்து வந்தது. அதில் இருந்து லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

சரித்திரச் சாதனை 

இந்த நிலையில் புதன்கிழமை இந்திய நேரப்படி மாலை சுமார் 6 மணி அளவில் சந்திரயான்-3ஐ நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதன்கிழமை காலை முதல் லேண்டரைத் தரையிறக்குவதற்கான வேலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு லேண்டரை தரையிரக்கும் பணியினை விஞ்ஞானிகள் தொடங்கினர். லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு லேண்டர் நிலவினை நோக்கி பயணித்தது. இதனைத் தொடர்ந்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மாலை 6.02 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது, இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  இதனைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சாதனை குறித்த அறிவிப்பை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இந்தியா தற்போது நிலவின் மீது இருப்பதாக அவர் பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து இந்தியா நிலவில் கால் பதித்துள்ளது. 

பிரதமர் பாராட்டு 

நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கியதை அடுத்து, இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பைப் பாராட்டிய  பிரதமர் மோடி, “வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான தருணம் இது என்றார்.  இந்தியர்களின் வாழ்த்து ஓங்கி ஒலிக்கும் நேரம். இது 140 கோடி இந்தியர்களின் இதயங்களின் மனவலிமைக்கான தருணம். இந்த வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானது,” என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் வாழ்த்து 

இஸ்ரோவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  “சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவின் மேற்பரப்பை கைப்பற்றிய 4வது நாடாக இந்தியாவை நிறுத்தும் ஒரு மகத்தான சாதனை. அயராத முயற்சிகள் மற்றும் புதுமைக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

சந்திரயான்- 3 திட்டத்தின் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் வீர முத்துவேல் செயல்பட்டு வருகிறார். விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியதும் பேசிய அவர் “எனது குழுவினர் முழுமையான பங்களிப்பை வழங்கினர்” என்று கூறினார். இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாயின் மகன் கார்த்திகேய சாராபாய் இந்த நிகழ்வு குறித்து ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், “இது மிதுவும் முக்கியமான நாள். மற்றவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு செயல்முறையின் மூலமாகவும், துல்லியமாகவும் சந்திரயான் 3-ஐ அனுப்ப முடிந்திருப்பது இந்தியாவுக்குமட்டுமல்ல பூமியில் உள்ள அனைவருக்கும் ஒரு அற்புதமான விசயம். அறிவியல், பொறியியல் ஆகியவற்றில் தவறில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்கிறோம். நிலவின் தென் துருவத்தில் யாராலும் இறங்க முடியவில்லை. அப்படியிருக்கும் போது, இது மனிதகுலத்திற்கு ஒரு பெரிய விஷயமாக இருக்கும்” என்றார். ஒடிசாவை சேர்ந்த பிரபல மணற் சிற்ப கலைஞரான சுதர்ஷன் பட்நாயக், சந்திரயானுக்கு வாழ்த்து தெரிவித்து மணற்சிற்பம் வடித்துள்ளார். சந்திரயான் விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட், நிலவில் இந்திய கொடி பறப்பது போன்றவற்றுடன் ஜெய் ஹோ என்ற வாசகத்துடன் இந்த சிற்பத்தை அவர் வடித்துள்ளார். பிரிட்டனின் முதல் விண்வெளி வீராங்கனையான ஹெலன் ஷர்மன் இந்தியாவின் சந்திரயான் திட்டம் குறித்து பிபிசியின் மோனிகா மில்லருக்கு பேட்டியளித்தபோது, இது புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் என்று குறிப்பிட்டார்.

“இஸ்ரோ.. என்னே ஒரு பயணம்... 60 ஆண்டுகால கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவையே “சந்திராயன் 3” நனவாக்கியது. இன்னும் பயணம் தொடரும் நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், நமது அறிவியல் ஸ்தாபனத்திற்கும், பல தசாப்த கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவிற்கும், அறிவியலுக்கும் இது ஒரு சிறந்த நாளாகவும், அறிவியல் மனப்பான்மைக்கும், பகுத்தறிவுக்கும் ஒரு சிறந்த மரியாதையாகவும் அமைந்துள்ளது”.

சென்னை பிர்லா கோளரங்கத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்.