நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’தான் முன்னிலையில் இருக்கிறது. இதுவரை அனைத்து நாடுகளும் நிலவின் வடதுருவ பகுதியில்தான் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றன. ஆனால், தென்துருவத்தை ஆராயும் பணியை யாரும் தொடங்காத நிலையில், இந்தியா சந்திரயான்- 3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 5 கட்டங்களாக சுற்றுவட்டப் பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் சந்திரயான் 3 விண்கலம் புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளுவதற்கான உந்து விசை செலுத்தப்பட்டது. இந்த நிலையில், லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் சனிக்கிழமையன்று (ஆக.5) இரவு சுமார் 7 மணிக்கு தொடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தபணி வெற்றிகரமாக முடிந்தது. அதன்படி, நிலவின் ஈர்ப்பு விசையில் தனது பயணத்தை தொடங்கியுள்ள சந்திரயான்-3 விண்கலம், ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவிற்குள் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.