அரியலூர் : நகரும் விண்கற்களைக் கண்டுபிடித்த அரியலூரைச் சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பாராட்டு சான்றிதழ் அளித்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உடன் இணைந்து செயல்படும் டி.ஏ.எப்.இ மற்றும் ஹவாய்ல் பல்கலைக்கழகங்கள் ஆப்பிள் டெலஸ்கோப் மூலம் பூமியை நோக்கி வரும் விண்கற்களை இரவு நேரங்களில் படமெடுத்து அதை அறிவியல் ஆர்வலர்களுக்கு அனுப்பும். இதனை அறிவியலாளர்கள் இனம் கண்டு அதன் ஆய்வறிக்கையை சிக்குரு கொலாப் நிறுவனத்திற்கு அனுப்புவார். இந்த கொலாப் நிறுவனம் பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது .
இந்நிலையில் , கடந்த சில மாதங்களாக கொலாப் நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு விண்கற்களின் வகைகளைக் கண்டுபிடிப்பதற்கான பயிற்சி அளித்து வருகிறது . இதில் அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான்குடி ஊராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை கவிதா , மற்றும் கருப்பூர் சேனாதிபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை கிரிஜா ஆகியோர் நகரும் விண்கற்களைக் கண்டுபிடிக்கும் பயிற்சியில் கடந்த ஜூலை மாதம் கலந்துகொண்டனர்.
இந்த பயிற்சியின் பொழுது இவர்கள் இருவரும் , நகரும் விண்கற்களை ஆப்பிள் டெலஸ்கோப் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பிற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் , அவர்கள் கண்டுபிடித்த விண்கற்களுக்கு அவர்களே பெயர் சூட்டுவதற்கான அனுமதியும் அளித்துள்ளது.