internet

img

பழைய சொல், புதிய தேடல் ‘வாலறிவன்’ - அண்டனூர் சுரா

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. இதை வென்றவர் தமிழ்நாட்டு வீராங்கனை என்பதால், ‘இளவேனில் வளரிவான் அசத்தல்’, ‘இளவேனில் வலரிவான் தங்கம் வென்றார்’ என்கிற செய்தி தொலைக்காட்சியில் வரிச்செய்தியாகவும், முதன்மைச் செய்தியாகவும் இடம் பெற்றன. வளரிவான், வலரிவான் இரண்டில் எது சரியெனத் தேடுகையில் அவருடைய பெயர் ஆங்கிலத்தில் ELAVENIL VALARIVAN என இருந்தது. வலரிவன், வளரிவன் என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள்

‘வாலறிவன்’ எனத் திருத்தினார்கள். தங்க மங்கை - இளவேனில் வாலறிவன்.
இச்சொல்  திருக்குறளில் கடவுள் வாழ்த்து குறள் (2) இல் இடம் பெற்றுள்ளது.
‘கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்’.
பாலூர் கண்ணப்ப முதலியார் தொகுத்த தமிழ் இலக்கிய அகராதி வாலறிவன் என்பதற்கு கடவுள் என்பதாகப் பொருள் தருகிறது.
வாலறிவன் என்பதற்கு மணக்குடவர் விளங்கிய அடிவினை உடையவன் எனப் பொருள் தருகிறார். இதையே  மெய்யறிவினை உடையான் (பரிமேலழகர்);  மேல் அறிவாளனான சிவன் (பரிதிமார் கலைஞர்); மாசற்ற அறிவுருவாகிய இறைவன் (காலிங்கர்); உண்மையறிவு உடையவன் (புலவர் குழந்தை) என்பதாகப் பொருள் தருகிறார்கள்.
வாலறிவன் - வால் + அறிவன்.
‘அறிவன், அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்’ என்கிறது  சிலப்பதிகாரம்.
‘ஆழ்கடற் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான்’- சீவக சிந்தாமணி.
வாலறிவன் என்பது சமண  சொல்.
சமண சமயத்தை வளர்த்தவர்கள் ‘தீர்த்தங்கரர்கள்’. அதாவது கடலைக் கடக்க உதவுபவர்கள். இங்கு கடல் என்பது பிறவிப் பெருங்கடல்.
சமணர்களின் போதனை மும்மணிகள் என அழைக்கப்படுகின்றன. அவை நற்காட்சி,நல்ஞானம், நல்லொழுக்கம். இம்மூன்றையும் ஒழுங்கே கடைபிடித்தால் வீடுபேறு அடையலாம் என்கிறது சமணம்.
சமண கொள்கையின் படி ஞானம் (அறிவு) ஐந்து  வகை. 1. மதி ஞானம் - இயற்கையான அறிவு அல்லது ஐம்பொறியினால் அறியும் அறிவு. 2. சுருத ஞானம் - ஆகம அறிவு அல்லது நூற்களால் ஏற்படும் அறிவு. 3. அவதி ஞானம் - முற்பிறவிகளை அறியும் அறிவு. 4. மனப்பர்யாய ஞானம் - பிறர் மனதில் உள்ளதை அறியும் அறிவு. 5.  கேவல ஞானம் - முழுதுணர் ஞானம் அல்லது மூன்று உலகங்களையும், மூன்று காலங்களையும் ஒருங்கே அறியும் அறிவு.
கேவல ஞானம் என்பது பிராகிருத சொல்.  இதற்கு தமிழில் ‘கடையிலா, அறிவு வரம்பற்ற, தூய அறிவு’ என்பதாகப் பொருள் கொள்ளமுடிகிறது. இந்த கேவல ஞானத்தை அடைந்தவர்களே ‘தீர்த்தங்கரர்கள்’. இக்கேவல ஞானத்தையே திருவள்ளுவர், ‘வாலறிவன்’ எனப் போற்றுகிறார் என்கிறார் தமிழ்ச் சமணம்  கட்டுரையில் பேரா.பானுகுமார்.
‘கடையிகந்த காட்சியொடு கடையிகந்த/ வாலறிவன்’ என்கிறது திருக்கலம்பகம்.
‘இலங்கொளி முக்குடை எந்திரத்/ தியங்க/அறிவன் சரிதம் முறையிற்/ காட்டி’ (பெருங்கதை).
‘உலகமூன்று பொருங்குட மேத்துமாண்/ திலகமாய திற லறிவன்னடி’ (வளையாபதி).
அறிவர்தம் மறிவர்க்கு மறிவா (நீலகேசி)
வாலறிவன் = வால்+அறிவன். வால் என்பதற்கு ஒளி, சுத்தம், வெண்மை, பெண், பெருமை, இளமை , பறவையின் பின்புற உறுப்பு , தோகை  என்பதாக நவீன தமிழ் அகராதி  பொருள் தருகின்றன. அதாவது Greatness, Abandance,Purity . இதன்படி, வாலறிவன் என்பதற்கு ‘முழுதுணர்ந்தவன்’,’முற்றும் உணர்ந்தவன்’,’கடையிலா அறிவன்’,’தூய அறிவன்’ , ‘மெய்யறிவுடையோன்’ எனப் பொருள்கொள்ளலாம்.