கார்டு டோக்கனைசேஷன் நடைமுறைக்கு வருவதால் ஜூலை 1 ஆம் தேதிமுதல் வாடிக்கையாளர்கள் கார்டு பரிவர்த்தனைகளை செய்யும் முறையில் மாற்றம் ஏற்படவுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் என்பது அனைத்து துறைகளிலும் உட்புகுந்துள்ளது. இது மக்களின் வேலைகளை எளிதில் செய்ய பயன்படுவதுடன், நிதி ரீதியாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது.
குறிப்பாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது யுபிஐ ஐடி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக ஷாப்பிங் செய்வது அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்தால், அவர்களின் விவரங்களையும், வங்கி சார்ந்த விவரங்களையும் ஷாப்பிங் தளங்கள் சேமிக்கின்றன. இது தவறாக பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது. மேலும் எந்தவொரு தளமும் வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதற்கான காலக்கெடுவாக ஜனவரி 1 கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப அமைப்பை மாற்ற போதுமான கால அவகாசம் தேவை என்று நிறுவனங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ஜூலை வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கார்டு டோக்கனைஷேசன் என்பது கார்டு வழங்குபவர் மற்றும் கார்டு நெட்வொர்க்கினை தவிர, பரிவர்த்தனையில் ஈடுபடும் எந்தவொரு பங்குதாரரும் வாடிக்கையாளர்களின் விவரங்களை நேரடியாக அணுக முடியாது. இதனால் வாடிக்கையாளர்களின் தரவுகளையும் சேமிக்க முடியாது.
இந்நிலையில், பணப்பரிமாற்ற சேவை மற்றும் வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஏடிஎம், கிரெடிட் கார்டு தகவல்களை சேமித்து வைப்பதை தடுக்கும், கார்டு டோக்கனைசேஷன் என்ற புதிய விதிமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்களின் கார்டு தரவை வணிகர்கள் தங்கள் சர்வர்களில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.