வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் குறுகியகால கடன்களுக்கான விகிதத்தை 0.40 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.
வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால மற்றும் நீண்டகால கடன்களை பெறுகின்றன. இந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட வட்டியை வங்கிகளிடம் பெறுகிறது. குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் ஆகும்.
அந்த வகையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய நிதியாண்டில் நடந்த 10ஆவதுநிதிக்கொள்கை குழுக்கூட்டத்தில் வட்டிவீதம் மாற்றப்படவில்லை. குறுகியகால கடனுக்கான வட்டி வீதம் 4 சதவீதமாக நீடிக்கும் என்றும், ரிவர்ஸ் ரெப்போ 3.5 சதவீதமாக நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்கூட்டம் இன்று திடீரென நடைபெற்றது. இதில் குறுகிய காலக் கடனுக்கான வட்டி வீதம் 40 புள்ளிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 0.40 சதவீதம் உயர்வு காரணமாக ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக வங்கிகளிடம் சாமானியர்கள் பெறும் கடனுக்கான வட்டி விகிதமும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நீடித்து வருவதால் பொருளாதார தடைகள் தீவிரமடைந்து தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வங்கிகள் சாமானியர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல்முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.