india

img

ஒன்றிய அரசின் பட்ஜெட், ஒட்டுமொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் - பி.ஆர்.நடராஜன் எம்.பி

புதுதில்லி, பிப்.9-
ஒன்றிய அரசின் பட்ஜெட், ஒட்டுமொத்தத்தில் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர்.நடராஜன் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன்மீதான விவாதத்தில் பி.ஆர்.நடராஜன் பேசியதாவது:

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த பட்ஜெட், மொத்தத்தில், ஏமாற்றமளிக்கிறது.

குறிப்பாக கொரோனா காலத்திலும், கோவிட்19 தொற்றுப் பிரச்சனையின் போதும் தங்களை அந்த சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ள முடியாத நிலையிலும், மக்களுக்கு இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பொது மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை.

பட்ஜெட் என்பது, பொதுத்துறை நிறுவனங்களை வலிமைப்படுத்தும் மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை நாட்டில் உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது செயலாகவில்லை. விலையேற்றத்தை தடுக்க எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

குறைந்த பட்ச ஆதரவு விலை பற்றி நிதி அமைச்சரின் உரையில் குறிப்பிடப்படக்கூட இல்லை. பட்ஜெட் 2022 பேரழிவுகள் மற்றும் மோசடிகள் நிறைந்த ஒரு மூட்டையாக உள்ளது. முந்தைய வருடங்களோடு ஒப்பிடுகையில், இந்த பட்ஜெட்டில், நெல் மற்றும் கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கான ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. நிதி அமைச்சர் பெருமையாக ரூ.2.37 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால், கடந்த வருடத்தில் உண்மையான செலவு ரூ.2.48 லட்சம் கோடிகளாகும்.

விவசாயிகளுக்கான அனைத்து பெரிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி உறுதியளிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலைக்காக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய உணவுக் கழகத்திற்கான கொள்முதலுக்கான ஒதுக்கீடு மற்றும் பரவலாக்கல் திட்டத்தின்  கீழ் மேற்கொள்ளப்படும் கொள்முதலுக்கான ஒதுக்கீடு ஆகியவை 28% அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. உர மானியத்திற்கான நிதி ஒதுக்கீட்டளவு 25% வரை குறைக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிஸான் திட்டத்தின் கீழ், 12.5 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு, குடும்பத்திற்கு ரூ.6000 வீதம், ஆதரவாக உதவ, ரூ.75000 கோடி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. ஆனால், பட்ஜெட்டில் ,

ரூ.68000 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர் பாதுகாப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடும், ரூ.500 கோடி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் தெளிவாக குறிப்பிடுவது என்னவென்றால், இந்த 2022 ஒன்றிய பட்ஜெட், விவசாயிகளுக்கு விரோதமானது மற்றும் ஒன்றிய அரசு விவசாயிகளை மீண்டும் ஏமாற்றிவிட்டது என்பதுமேயாகும்.

நடப்பு ஆண்டோடு ஒப்பிடுகையில் 2022-23 பட்ஜெட்டில் தடுப்பூசிகளுக்கான சமூகநல திட்டங்களுக்கு உண்டான ஒதுக்கீடுகூட குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்த பெருந்தொற்று பிரச்சனையிலிருந்து ஒன்றிய அரசு எந்த பாடத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை எனத் தெரிகின்றது.

சமீபத்திய அனைத்து வருடங்களிலும் ஒன்றிய அரசு மிகக்குறைந்த அளவு ஒதுக்கீட்டு செலவினைக்கூட குழந்தைகள் நலத்திற்கென செய்யவில்லை. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு இருந்ததைவிட குழந்தைகள் நலத்திற்கான திருத்தி மதிப்பிடப்பட்ட செலவானது ரூ 5700 கோடி குறைவானது. பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மூடப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் அழிவுகரமான விளைவுகளிலிருந்து தங்களை ஈடுகட்டிக் கொள்ள குழந்தைகளுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் செய்யப்படவில்லை.

ஒன்றிய பட்ஜெட் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏதாவது நிவாரணம் அளிக்கும் என்று நாடு எதிர்பார்த்தது. தற்போது இந்தியா 200 மில்லியன் வேலைகளை இழந்துள்ளது. ஆனால் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதிக்கான அறிவிப்பு ஏதுமில்லை. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 50 வருடங்களில் தற்போதுதான் மிக மோசமாக உள்ளது. பெருந்தொற்றால் மக்கள் அழிவுக்கு உள்ளாக்கப்படுவதோடு பட்ஜெட்டால் முற்றிலுமாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த பட்ஜெட் இவர்களுக்கு 'பூஜ்ய பட்ஜெட்' என்பதால் இதில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய எந்த பார்வையும் பிரதிபலிக்கப்படவில்லை.

அடிக்கடி உயர்கின்ற பெட்ரோலிய பொருட்களின் விலையானது குடும்ப பட்ஜெட்டை மீள்வதற்கு அப்பாற்பட்டு நிலைகுலைய வைத்துள்ளது. கலால் வரி குறைக்கப்பட்டிருந்தால் அது அவர்களுக்கு சிறிது நிவாரணத்தை அளித்திருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக, சமையல் எரிவாயு மானியம் பெரிய அளவில் குறைப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த வருடம் ஒதுக்கீடு 60% குறைக்கப்பட்டது. மற்றொரு 60% குறைப்பு 2022-23 பட்ஜெட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய பட்ஜெட்டானது மோடி அரசின் பணக்கார நண்பர்களின் விருப்பங்களை பாதுகாக்கக்கூடியதாக மட்டுமே உள்ளது. கடந்த இரண்டு வருட பெருந்தொற்றுக் காலத்தில் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகியுள்ளனர். ஆக்ஸ்ஃபேம் உடைய கணிப்பின்படி இந்தியாவின் ஆகசெல்வந்த குடும்பங்களின் சொத்து மதிப்பு 2021 ல் உச்சத்தை அடைந்துள்ளதாக பதிவாகியுள்ளது. செல்வந்தர்களான முதல் பத்து சதவீத இந்திய மக்கள் 57% வருமானத்தை வைத்திருக்கிறார்கள்.  இருப்பினும் இவர்களுடைய உயர்ந்த லாபத்தின் மீது வரி விதிக்க எந்த முன்மொழிவும் அரசிடம் இல்லை என்பதோடு இந்த வரிவிதிப்பினால் கிடைத்திருக்கக்கூடிய வளங்களை கஷ்டப்படுகின்ற அதிக பெரும்பான்மையான மக்களுக்கு நிவாரணமாக வழங்கலாம் என்ற முன்மொழிவும் அரசிடம் இல்லை.

மேற்சொன்ன கருத்துகளின்படி 2022-23 பட்ஜெட்டானது பொது மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான முன்னுரிமை வழிகளை அடையாளம் காணுவதில் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டது. இவ்வாறு பி.ஆர். நடராஜன் கூறினார்.

(ந.நி.)