புதுதில்லி, ஏப்.2- பாரம்பர்ய மூலிகை மரங்களைப் பரவலாக்கிட, ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், பாரம்பரிய மூலிகை மரங்களைப் பற்றி, ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்திடம்,
நாடு முழுவதும் கிடைக்கக்கூடிய பாரம்பரிய மூலிகை மரங்களின் எண்ணிக்கை பற்றி புள்ளிவிபரம் ஏதேனும் அரசிடம் உள்ளதா என்றும் ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும், மாநில வாரியாக மூலிகை குணமுள்ள முதல் இருபது மரங்களின் விவரங்கள் என்னென்ன என்றும்,
தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை பராமரிப்பதற்காக, நாளது தேதியில், மாநில வாரியாக நடப்பட்ட மூலிகைச் செடிகளின் எண்ணிக்கை விவரங்களுடன் இதற்கென ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி விபரங்கள் என்னென்ன என்றும், கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கூறியதாவது:
நாடு முழுவதும் கிடைக்கக்கூடிய மூலிகை மரங்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விபரங்கள் எதுவும் அரசிடம் இல்லை. எனினும், கலாச்சாரத் துறை அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கலாச்சாரத் துறை அமைச்சகம், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை நாட்டில் உருவாக்கும் குறிக்கோளுடன், 28-06-2020 முதல் 12-07-2020 வரையிலான காலத்தில் "சங்கல்ப் பர்வா" என்ற திட்டத்தை முன்னெடுத்தது. நாட்டில் பாரம்பரிய மூலிகைகள் என்று அடையாளம் காணப்பட்ட ஐந்து மரங்களான (i) பர்கத் (ii) ஆம்லா (iii) பீப்பால் (iv) அசோக் (v) பெல் ஆகிய மரங்களின் நாற்றுகளை நடுவதற்கு கலாச்சார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் இணை துணை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் போது அலுவலக வளாகங்களிலும், சாத்தியமுள்ள இடங்களில் எல்லாமும் மொத்தமாக 11,442 நாற்றுகள் நடப்பட்டன.
ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ மூலிகைச் செடிகள் அமைப்பு (NMPB) "மூலிகைச் செடிகளின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நிலையான நிர்வாகத்திற்கான ஒன்றிய பிரிவின் திட்டம்" என்பதன் கீழ், ஆம்லா, அசோக், பெல், தேஜ்பத், நீம் போன்ற மர இனங்கள் உள்ளிட்ட மருத்துவச் செடிகளின் நடவு / வளப் பெருக்கத்திற்காக மாநில வனத் துறைகளுக்கு ஆதரவு அளிக்கிறது.
கலாச்சார அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட தவல்களின் படி, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை பராமரிப்பதற்கான "சங்கல்ப் பர்வா", திட்டத்திற்கு என்று எந்த ஒரு தனிப்பட்ட நிதியும் ஒதுக்கப்படவில்லை. எனினும், ஆயுஷ் அமைச்சகத்தின், தேசிய மருத்துவ மூலிகை செடிகள் அமைப்பின் (NMPB) "மருத்துவ செடிகளின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நிலையான நிர்வாகத்திற்கான ஒன்றிய பிரிவுத் திட்டத்தின்" கீழ், கடந்த ஐந்து வருடங்களில், மருத்துவ மூலிகைச் செடிகளின் நடவு / வளப்பெருக்கம் ஆகியவற்றுக்காக, மொத்தமாக ரூ.12286.38 லட்சம் விடுவிக்கப்பட்டு, ரூ.10003.01 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
(ந.நி.)