கொல்கத்தா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவரும், மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா (80), வியாழனன்று காலமானார்.
தோழர் ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணியின் ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சிக்கான கொள்கைகளை வடிவமைத்தவர் தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அவற்றைச் செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றியவர். இறுதிவரை ஒரு அர்ப்பணிப்பு மிக்க கம்யூனிஸ்ட் வாழ்க்கையை வாழ்ந்து வழிகாட்டியவர். அத்தகைய மாபெரும் தலைவரின் மறைவால், மேற்கு வங்க மாநிலமே துயரத்தில் ஆழ்ந்தது.
வீதிகள் தோறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணியின் தொண்டர்கள் மட்டுமன்றி, பல்வேறு அரசியல் கட்சியினரும் கட்சி வேறுபாடுகளை கடந்து, தோழர் புத்ததேவுக்கு அஞ்சலி செலுத்தினர். படங்களை ஏந்தியபடி இரங்கல் ஊர்வலங்களை நடத்தினர்.
வியாழனன்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட தோழர் புத்ததேவ் உடலுக்கு, இடது முன்னணியின் முதுபெரும் தலைவர் பிமன் பாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் சூர்யகாந்த் மிஸ்ரா, ராமச்சந்திர தோம் ஆகியோர் தங்களின் செவ்வணக்கத்தை செலுத்தினர். தோழர் புத்ததேவின் துணைவியார் மீராவுக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர், தோழர் புத்ததேவின் உடல், மேற்குவங்க சட்டமன்ற வளாகமான பிதான்சபாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்ட புத்ததேவின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை (DYFI) நிறுவிய தலைவர்களில் ஒருவர் என்ற அடிப்படையில், டிஒய்எப்ஐ மாநிலக்குழு அலுவலகத்திலும் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட தோழர் புத்ததேவின் உடல், பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு- அவரது விருப்பப்படி என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
தோழர் புத்ததேவ் உடலுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு சார்பில் செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. இதில், (இடமிருந்து) பிருந்தா காரத், புத்ததேவ் துணைவியார் மீரா, முகமது சலீம், பிமன் பாசு, ஹன்னன் முல்லா, மாணிக் சர்க்கார், நிலோத்பல் பாசு, பிரகாஷ் காரத், எம்.ஏ. பேபி, தபன்சென் ஆகிய தலைவர்கள் பங்கேற்றனர்.