india

img

தமிழக மீனவர் கைது: தடுத்து நிறுத்த என்ன முயற்சி?  சு.வெங்கடேசன் எம்.பி கேள்வியும், அமைச்சரின் பதிலும்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;

நாடாளுமன்றத்தில் நான் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை குறித்து கேள்வி (எண் 1023/22.07.2022) எழுப்பி இருந்தேன்.
*நாடாளுமன்றத்தில் கேள்வி*
மீன் பிடிப்பதற்கான ஆண்டு தடைக் காலம் ஜூன் 15 அன்று முடிந்த பின்னரும் தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க என்ன முயற்சிகள் அரசின் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன? மார்ச் 22, 2022 அன்று நடைபெற்ற இரு நாடுகளின் கூட்டு செயல்பாடு குழுவில் (Joint Working Group) இது குறித்து விவாதிக்கப்பட்டதா? ஏதேனும் திட்டவட்டமான தீர்வுக்கான முன் மொழிவுகள் ஏதும் அங்கு வைக்கப்பட்டனவா? என்ற கேள்விகளை எழுப்பி இருந்தேன். 
*அமைச்சர் பதில்*
வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளீதரன் இதற்கான பதிலை ஜூலை 22 அன்று சபையில் அளித்தார். 
சர்வதேச கடற் எல்லையை கடப்பதாகவும், இலங்கை கடற் பகுதியில் மீன் பிடிப்பதாகவும் குற்றம் சாட்டி இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். இது வரை உள்ள தகவல்களின் படி 2022 இல் மட்டும் இது நாள் வரை 144 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பேர் ஜூன் 15 க்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு தனித்தனி நிகழ்வுகளாக 12 மீனவர்கள் ஜூலை 3, 2022 அன்றும், 5 பேர் ஜூலை 4 அன்றும், 6 பேர் ஜூலை 11 அன்றும், 6 பேர் ஜூலை 11 அன்றும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்த அரசு முறை முயற்சிகளால் 144 பேரில் 138 பேர் விடுதலை உறுதி செய்யப்பட்டுள்ளது. 138 பேரில் 115 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். 23 பேரை விரைவில் அழைத்து வரப்படுவார்கள். தற்போது 6 பேர் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்கள் ஜூலை 20 அன்று கைது செய்யப்பட்டவர்கள். அவர்களையும் மீட்டு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
*அரசு மட்ட முன்னெடுப்புகள்*
இந்திய மீனவர்கள் பிரச்சினை உச்ச பட்ச மட்டங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன. அதில் இந்திய இலங்கை பிரதமர்கள் இடையிலான செப்டம்பர் 20, 2020 இல் நடந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையும் அடங்கும். 2021 ஜனவரி 5 முதல் 7 வரை இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கை பயணத்தின் போதும் இலங்கை மீன் வள அமைச்சர் உடன் நடந்த பேச்சு வார்த்தைகளில் இந்திய மீனவர்கள் குறித்த அனைத்து பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன.
2021 அக்டோபர் 2 முதல் 5 வரை இலங்கை சென்ற அயல்துறை செயலாளரின் இலங்கை பிரமுகர்கள் சந்திப்பிலும் இது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்திய மீனவர்கள் பிரச்சினைகளை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய அவசியத்தை இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஏற்கெனவே இப் பிரச்சினை மீது இரு அரசுகளுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள உடன்பாடுகள் முழுமையாக அமலாக்கப்பட வேண்டும், இரு தரப்பிலும் பலப் பிரயோகம் எந்த சூழலிலும் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அழுத்தமாக சுட்டிக் காட்டப்பட்டது. ஜனவரி 10, 2022 வெளியுறவு அமைச்சர், இலங்கை நிதி அமைச்சர் உடனான மெய் நிகர் சந்திப்பில் இலங்கை சிறையில் உள்ள  இந்திய மீனவர்களை விடுதலையை விரைவு செய்ய வேண்டுமென்று விவாதிக்கப்பட்டது. மார்ச் 22, 2022 அன்று வெளியுறவு அமைச்சரின் இலங்கை பயணத்தின் போது இலங்கை மீன் வள அமைச்சரிடம் விவாதிக்கப்பட்டது. இந்திய மீனவர் நலன், பாதுகாப்பிற்கு இந்திய அரசு உச்ச பட்ச முன்னுரிமையை அளிக்கிறது. இரு நாடுகளின் அயலுறவு மற்றும் மீன் வள அமைச்சர்களின் 2+2 முன்முயற்சி நவம்பர் 2016 இல் புது டெல்லியில் கூடிய போது இரு தரப்பு கூட்டு செயல் குழு (Joint Working Group - JWG) மற்றும் இரு நாடுகளின் மீன் வள அமைச்சர்களின் கூட்டம் ஆகிய நடைமுறைகள் இலங்கை உடனான மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிறுவன வடிவம் பெற்றன. மார்ச் 2022 இல் கூட்டு செயல் குழுவின் (JWG) நடைபெற்ற ஐந்தாவது சுற்று சந்திப்பு மீனவர் பிரச்சினைகளின் எல்லா பரிமாணங்களையும் உள்ளடக்கி விவாதித்தது.
இவ்வாறு அமைச்சர் பதில் தந்துள்ளார் 
*நிற்காத தாக்குதல்கள்*
"என்னைப் பொறுத்த வரையில் அமைச்சரின் பதில், அரசு எடுத்துள்ள முயற்சிகளை விவரித்தாலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாகவே உள்ளது. அமைச்சரின் பதிலில் குறிப்பிடப்பட்டு இருப்பது போல மனிதாபிமானத்தோடு இலங்கை அரசு அணுகுவதும், இரு தரப்பு உடன்பாடுகள், பேச்சு வார்த்தைகளின் முடிவுகளை எழுத்திலும், உணர்விலும் சரியாக அமலாக்க வேண்டும். ஆகவே ஒன்றிய அரசு இன்னும் அரசு முறை முயற்சிகளை தீவிரமாக்கி இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது சிறையில் உள்ள 6 தமிழ் மீனவர்களும் விரைவில் விடுதலை ஆக வேண்டும். விடுவிக்கப்பட்ட 23 பேர் விரைவில் வீடு திரும்ப வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.