india

img

கார்ப்பரேட்டுகளின் நலன்களைக் காத்திடும் பட்ஜெட் - சீத்தாராம் யெச்சூரி தாக்கு

நிதியமைச்சர்  இன்று (செவ்வாய்க்கிழமை)  அளித்திருக்கும் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கான பட்ஜெட் என்றும், விவசாயிகள், இளைஞர்கள், சாமானிய மக்கள் கிரிமினல்தனமான முறையில் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

யாருக்கான பட்ஜெட் இது? இந்தியாவில் உள்ள 10 சதவீத பணக்காரர்கள், நாட்டின் செல்வாதாரங்களில் 75 சதவீதத்தைப் பெற்றிருக்கிறார்கள்., நாட்டில் கீழ்நிலையில் உள்ள 60 சதவீதத்தினர், 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பெற்றிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் வேலையின்மை, வறுமை, பசி-பட்டினி அதிகரித்த நிலையில், கொள்ளை லாபம் ஈட்டியவர்கள் மீது ஏன் அதிக வரி விதித்திட வில்லை?

இது மக்களுக்கு எதிரான பட்ஜெட். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டு மக்களின் துயரம் மிகவும் அதிகரித்துள்ள அதே சமயத்தில், அவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த உணவு, உரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான மானியங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இது மக்களின் வாழ்வாதாரங்களின் மீதான குரூரமானத் தாக்குதலாகும்.

நிதியமைச்சர் கோதுமை, நெல் போன்றவற்றிற்கான குறைந்தபட்ச ஆதார விலை 2.37 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று பெருமிதத்துடன் அறிவித்திரக்கிறார். உண்மையில் இது சென்ற ஆண்டு அளித்த 2,478 லட்சம் கோடி ரூபாயைவிட மிகவும் குறைவாகும். இவ்வாறு விவசாயிகள் மீதான கிரிமினல்தனமான தாக்குதல் தொடர்கின்றன.

இந்தியாவில் இன்றைய தினம் 20 கோடி வேலைகள் காணாமல்போய்விட்டன. நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் அறிவிக்கப்படவில்லை. மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்திற்கான ஒதுக்கீடு சென்ற ஆண்டு இருந்ததைவிட சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் குறைவு. இது இளைஞர்கள் வாழ்வாதாரங்கள்  மீதான கிரிமினல்தனமான தாக்குதலாகும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.