ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்த அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
அதானி குழுமம், அதன் நிறுவனங்களின் பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றி மோசடியில் ஈடுபட்டதையும், வரி எய்ப்பு செய்ததையும், அதன் அதிகபட்ச கடன் சுமைகள் பற்றியும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக ஆய்வு செய்து 106 பக்க ஆய்வறிக்கை ஒன்றைக் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வெளியிட்டது. இதை அடுத்து அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்தன. இந்த நிலையில், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்த அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. மனுவைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் விஷால் திவாரி, இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு பிப்ரவரி 10-ஆம் தேதி விசாரணைக்கு வரவிருப்பதாகத் தெரிவித்தார். எனவே, இந்த மனுவும் அத்துடன் சேர்ந்து வெள்ளிக்கிழமையே விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்த பொதுநல மனுக்கள் நாளை விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.