india

img

மீடியா ஒன் தொலைக்காட்சி மீதான தடை நீக்கம்!

கேரளாவின் மீடியா ஒன் தொலைக்காட்சி மீதான ஒன்றிய அரசின் தடையை நீக்கவும், ஒளிபரப்பு உரிமத்தை வழங்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவின் மீடியா ஒன் தொலைக்காட்சியை ‘மத்யமம்’ என்ற ஒலிபரப்பு நிறுவனம் நடத்தி வந்தது. 10 ஆண்டுகளுக்கு இந்த சேனலுக்கு உரிமம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இத்தொலைக்காட்சி சேனலின் உரிமம் காலாவதியானது. உரிமத்தை புதுப்பிக்க வேண்டி சேனல் தரப்பில் விண்ணப்பித்த போது நாட்டின் பாதுகாப்பு கருதி உரிமத்தை புதுப்பிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதை அடுத்து, மீடியா ஒன் சேனல் தரப்பில் கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கேரளா உயர் நீதிமன்றம் ஒன்றிய அரசின் முடிவை ஏற்று மீடியா ஒன் சேனலின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த சூழலில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்த்து மீடியா ஒன் மற்றும் கேரளா பத்திரிக்கையாளர்கள் சங்கம் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு வந்தது.

அப்போது, கேரளாவின் மீடியா ஒன் தொலைக்காட்சி மீதான ஒன்றிய அரசின் தடையை நீக்கி, ஒளிபரப்பு உரிமத்தை வழங்க உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் குடிமக்களின் அடிப்படை உரிமையை மறுக்க கூடாது என்றும், வலுவான ஜனநாயகத்திற்கு பத்திரிகை சுதந்திரம் அவசியம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.