நாடாளுமன்ற மக்களவைக்குள் சிலர் புகைக்குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து உள்துறை அமைச்சரும் ஒன்றிய அரசும் பதிலளிக்க வேண்டும் என்று கோரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன் உட்பட எதிர்க்கட்சிகளின் 13 எம்.பி.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார்.இந்த அராஜகத்தை கண்டித்து எம்.பி.க்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விவரிக்கிறார் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்
டிசம்பர் 13 அன்று நாடாளுமன்ற மக்களவை யின் பார்வையாளர் மாடத்திலிருந்து 2 பேர் மதியம் 12.50 மணியளவில் குதித்தனர். இவர்களால் நாடாளுமன்றத்தில் களேபரம் ஏற்பட்டது. அந்த களேபரமும் பதற்றமும் 1.30 மணி வரை நீடிக்கிறது. இவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களும் பணியாளர்களும் 35 நிமிடங்களுக்கும் மேலாக போராடி, பிடித்து 1.35 மணிக்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
எதையும் கண்டு கொள்ளாத சபாநாயகர்
இதன்பின்னர் வெறும் 25 நிமிட இடைவெளி யில் 2 மணிக்கே அவையை கூட்டிய சபாநாயகர், அவையின் அன்றாட நடவடிக்கையை மீண்டும் சர்வ சாதாரணமாகத் தொடர்கிறார். தபால்துறை மசோதா குறித்த விவாதத்தை துவக்குகிறார். நாடாளுமன்றத்திற்குள் புகைக்குப்பி வீசப்பட்டு இவ்வளவு களேபரம் நடந்த பிறகும் அதனால் ஏற்பட்ட மஞ்சள் புகைமண்டலத்தின் நெடி கூட மறைவதற்கு முன்பு, அதுகுறித்து விசாரிக்காமல், பாதுகாப்பை உறுதி செய்யாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் மசோதா குறித்த விவாதத்தை துவங்கியது மிகவும் வேதனைக்குரியது.
தடயங்கள் அழிந்த பின் வந்து என்ன பயன்?
சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக வலியுறுத்திக் கூறிய பிறகு, அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதன்பிறகுதான் சம்பந்தப்பட்ட துறையின் பொறி யாளர்கள், தடயவியலாளர்கள் வரவழைக்கப்பட்ட னர். சம்பவம் நடந்து, உடனே அவையை கூட்டிய தால் அத்தனை எம்பிக்களும் சென்று அமர்ந்து விட்டோம்; அதன் பிறகு தடவியலாளர்கள் வந்து என்ன பயன்? தடயங்கள் அழிந்திருக்குமே!
எனவே, நாடாளுமன்றத்திற்குள் நிகழ்ந்த அத்துமீறல் குறித்து, பாதுகாப்பு குறைபாடு குறித்து உண்மையான அக்கறையுடன் ஒன்றிய பாஜக அரசு விசாரிக்கவில்லை என்பதுதான் நிலைமை
உண்மைக்காக குரல் கொடுப்பது ‘அமளி’யா?
.மறுநாளும் (டிசம்பர் 14) நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பதிலளிக்காமல் ஒன்றிய ஆட்சியாளர்கள், வழக்கமான வேலையைத் துவக்கினர். நடந்தவை குறித்து நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும், விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். உண்மையை நாட்டு மக்களுக்குச் சொல்வதே பாஜகவுக்கு ‘அமளி’ என்றால், அந்த அமளியை செய்வதற்காகத்தான் நாட்டு மக்கள் எங்களை அனுப்பியிருக்கிறார்கள். உண்மையை நாட்டு மக்களுக்குச் சொல்கிற வரை தொடர்ந்து போராடுவோம்.
நாடாளுமன்றத்தில் புகைக்குப்பி வீசியவர் களுக்கு அவைக்குள் நுழைவதற்கான அனு மதிச்சீட்டை வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த எம்.பி. கொடுத்திருந்தால் நாடு முழுவதும் பாஜக இது குறித்து அலறியிருக்கும்.அவர்களுக்கு அனு மதிச்சீட்டு கொடுத்தது பாஜக எம்.பி.என்பதால் திசை திருப்பும் நடவடிக்கையை பாஜக மேற்கொள்கிறது.
900 எம்.பி.க்களுக்கும் ஒரே வாசல்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் செல்வதற்கு நான்கு வாசல்கள் உள்ளன. பிரதமர், சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவரான குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோருக்கு தனித்தனி வாசல்கள் உள்ளன. ஆனால் 900 எம்.பி.க்களும் செல்வதற்கு ஒரேஒரு வாசல்தான் உள்ளது. இது என்ன ஜனநாயகம்? நடப்பது மன்னராட்சியா? மக்களாட்சியா? என்ற கேள்வி எழுகிறது. பிரதமர், மக்களவை சபாநாயகர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகிய மூவரும் ஒரு வாசல் மூலமாக சென்று வரலாமே! மற்ற மூன்று வாசல்களில் மக்களவை,மாநிலங்களை உறுப்பினர்கள் சென்றுவர அனுமதிக்கலாமே!
கேள்வி நேரத்தில் இந்த தாக்குதல் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்? கேள்வி நேரத்தில் மக்களவையில் 80 சதவீதமான எம்.பி.க்கள் பங்கேற்பார்கள். அத்தகைய நிலையில் இது நிகழ்ந்திருந்தால்; எம்.பி.க்கள் அனைவரும் ஒரு வாசல் வழியாக வெளியேறியிருந்தால் எவ்வளவு பெரிய நெருக்கடி உருவாகியிருக்கும்!
20 நிமிடம் கழித்து வந்த ‘பாம் ஸ்குவாடு’
தாக்குதல் நடந்தபோது நான்தான் முதன்முதலில் வெளியே வந்து காவலர்களிடம் பாதுகாப்பு வீரர்களை உள்ளே அனுப்புங்கள் என்று கூறினேன். நான் சத்தம் போட்டுக் கூறிய பிறகு, 20 நிமிடங்களுக்குப் பிறகே ‘பாம் ஸ்குவாடு’ (வெடிகுண்டு நிபுணர்கள்) வந்தது. இப்படிப்பட்ட நெருக்கடியான, அசாதாரண மான சூழலை எதிர்கொள்ள எந்த முன்னேற்பா டும் நாடாளுமன்றத்தில் இருப்பதுபோல் தெரி யவில்லை. இதுகுறித்து விசாரிக்க வேண்டும். ஒன்றிய ஆட்சியாளர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
பாஜகவினரின் பிக்னிக் ஸ்பாட்டா?
பிக்னிக் ஸ்பாட்டிற்கு மக்களை அழைத்து வருவது போல் பாஜகவினர், புதிய நாடாளு மன்றக் கட்டிடத்தை பார்வையிட ஏராளமான பேருந்துகளில் மக்களை கொண்டு வந்து இறக்குகிறார்கள். இதற்கான அனுமதியை சபாநாயகர் எப்படி வழங்குகிறார்? ஒரு எம்.பி. 2 பேருக்குத்தான் அனுமதி வழங்க முடியும். ஆனால், இவ்வளவு பேருக்கு எப்படி அனுமதி வழங்குகிறார்கள்? கூட்டம் கூட்டமாக வருபவர் களை எப்படி கையாள்வது என்று நாடாளுமன்ற பாதுகாப்பு ஊழியர்களும் புலம்புகிறார்கள். நாடாளுமன்ற பாதுகாப்புப் பிரிவில் 170 ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.
சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு
பழைய நாடாளுமன்றக்கட்டிடத்தை விட புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 2 மடங்கு பெரியது. பாதுகாப்பு குறைபாடு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
ஜனநாயகத்தின் அடிப்படையான உரிமை யைக் கேட்டால்,அதை அமளியில் ஈடுபடுவதாக சொல்வது என்பது குரலை நெரிக்கிற சர்வாதிகாரத்தின் வெளிப்பாடுதான் , எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம்!
தொகுப்பு: எஸ்.உத்தண்ட்ராஜ்