ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வீட்டிற்குள், புதன்கிழமை காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென புகுந்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை தில்லி அரசு அமல்படுத்தியது. அப்போது, தனியார் நிறுவனங்களுக்கு மதுபான கடை உரிமம் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டது. இந்த குற்றச்சாட்டை விசாரித்த அமலாக்கத்துறை, தில்லி துணை முதல்வரும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது. இந்நிலையில், மதுபான கொள்கை வழக்கிலேயே சஞ்சய் சிங் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறியிருக்கும் அமலாக்கத்துறையினர், சஞ்சய் சிங்கை கைதும் செய்துள்ளனர். இந்த நிலையில், இதற்கு சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
"ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்கை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். மோடி அரசின் கீழ் அமலாக்கத்துறை பொய்யான தனது குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளாத அரசியல் எதிரிகளை “ஒத்துழைப்பு அளிக்கவில்லை” எனக் கூறி கைது செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. “இந்தியா எனும் பாரதத்தின்” நலனுக்காக மோடி அரசாங்கம் அகற்றப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.