india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தேர்தல் பத்திர விபரங்களை சமர்ப்பித்தது எஸ்பிஐ
புதுதில்லி, மார்ச் 12- உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, செவ்வாயன்று மாலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் குறித்த விபரங்களை பாரத ஸ்டேட்வங்கி (எஸ்பிஐ) சமர்ப்பித்திருக்கிறது. இனி எஸ்.பி.ஐ அளித்த விவரங்களை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தேர்தல் ஆணையம் வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் கூடியிருக்கிறது. இன்னும், சில நாட்களில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகக்கூடும் என்பதால் தேர்தல் பத்திரங்கள் விவரங்கள்மீது கவனம் திரும்பியிருக்கிறது.

ஹரியானாவில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது
கட்டாரை கழற்றி விட்ட பாஜக 

சண்டிகர், மார்ச் 12- வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் ஹரியானாவில் ஆளும்  பாஜக மற்றும் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) இடையே மோதல் ஏற்பட்டது. இந்த  மோதல் நாளுக்குநாள் தீவிரமடைந்த நிலையில், திங்க ளன்று இரவு பாஜக அரசிற்கு அளித்து வந்த ஆதரவை ஜேஜேபி கட்சி வாபஸ் பெற்றது. தொடர்ந்து  ஜேஜேபி  கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.  இதனால் ஹரியானா பாஜக ஆட்சி கவிழும் நிலை  ஏற்பட்ட நிலையில், செவ்வாயன்று காலை ஹரியானா  முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது அமைச்சரவை யுடன் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின்னர் மனோகர் லால் கட்டார், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஹரியானா இல்லத்தில் கூட்டம் நடத்தினார். கூட்டத்தின் முடிவில் நயாப் சிங் சைனி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், செவ்வாயன்று மாலை ஆளு நர் மாளிகையில் நடந்த விழாவில் நயாப் சைனி ஹரியானாவின் புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்டது. சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் கோ.அரவிந்தசாமி, மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா, நிர்வாகிகள் எஸ்.ஆனந்த், ரா.பாரதி, வே.அருண்குமார், தமிழ், நித்திஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.