நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நீடித்து வருவதால் பொருளாதார தடைகள் தீவிரமடைந்து தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7.79 விழுக்காடு உயர்ந்துள்ளதாக ஒன்றிய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிலான உச்சமாகும்.
கடந்த வாரம் ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை நடத்தியதில் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதத்தை 40 புள்ளிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. 2018க்கு பிறகு 0.40 சதவீதம் உயர்வு காரணமாக ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்திருந்தார்.
மேலும் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக வங்கிகளிடம் சாமானியர்கள் பெறும் கடனுக்கான வட்டி விகிதமும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உணவு மற்றும் எரிபொருள்களின் விலை மிக கடுமையாக உயர்ந்ததால் சில்லறை பணவீக்கம் உயர்ந்துள்ளதாக தெரிகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் 6.65 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.79சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே கடந்த ஆண்டு ஏப்ரல் 2021ல் 4.23 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து வரும் ஜூன் மாதம் ரிசர்வ் வங்கியின் அடுத்த கட்ட கொள்கை கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்த அதிக வாய்ப்புள்ளது என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.