india

img

தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால்  நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதை அடுத்து தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 2-ஆம் தேதி தீர்ப்பளித்தது. 
இந்த நிலையில், மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.  இதை தொடர்ந்து, இந்த சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில், தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் தேர்வுக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் குழுவில் இடம்பெறும்படி மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.