india

img

3 ஆண்டுகளில் பி.எம் கேர்ஸ் நிதிக்கு ரூ.535.44 கோடி வெளிநாட்டு நன்கொடை!

கடந்த மூன்று ஆண்டுகளில் பி.எம் கேர்ஸ் நிதிக்கு ரூ.535.44 கோடி வெளிநாட்டு நன்கொடை மூலம் பெறப்பட்டது என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. 

கொரோனா காலத்தில், பிரதமர் நரேந்திர மோடி திடீரென பிரதமரின் அவசரக்கால சூழ்நிலை குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதியம் (The Prime Minister’s Citizen Assistance and Relidf in Emergency Situations Fund- PM CARES FUND) என்ற நிதியமைப்பை, 2020 மார்ச் 28-ஆம் தேதி அவசர அவசரமாக உருவாக்கிக் கொண்டார். இந்த அறக்கட்டளைக்கு தன்னைத் தலைவராகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்களை உறுப்பினர்களாகவும் நியமித்துக் கொண்டார். மேலும் இந்த அறக்கட்டளையின் கீழ் பல ஆயிரம் கோடிகளை நன்கொடையாகப் பெற்றார். ஆனால், இதுவரையிலும் பி.எம் கேர்ஸ் நிதியில் எவ்வளவு நிதி நன்கொடையாகப் பெறப்பட்டிருக்கிறது, பெறப்பட்ட நிதி எதற்காக எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பன போன்ற விவரங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கூட தரப்படுவதில்லை. 
இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் பி.எம் கேர்ஸ் நிதிக்கு ரூ.535.44 கோடி வெளிநாட்டு நன்கொடை மூலம் பெறப்பட்டது என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, கடந்த 2019-20 நிதியாண்டில், ரூ.40 லட்சமும், 2020-21 இல் ரூ.494.92 கோடியும், 2021-22 இல் ரூ.40.12 கோடியும் வெளிநாட்டு நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
அதேபோல், 2019-20 நிதியாண்டில், ரூ.3,075.85 கோடியும், 2020-21 இல் ரூ.7,183.77 கோடியும், 2021-22 இல் ரூ.1,896.76 கோடியும் தன்னார்வ பங்களிப்புகளாக பெறப்பட்டுள்ளது.
பி.எம் கேர்ஸ் நிதியில், கடந்த மூன்று ஆண்டுகளில் தன்னார்வ பங்களிப்புகளாக ரூ.12,156.39 கோடியும், வெளிநாட்டு நன்கொடையாக ரூ.535.43 கோடியும் என மொத்தம் ரூ.12,691.82 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது.