இந்தியாவில், 2019-2021 ஆண்டுகளில் 13.13 லட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயிருப்பதாக நாடாளுமன்றத்தில் உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கடந்த வாரம் பதிலளித்துள்ளார். அதன்படி, 2019-2021-ஆம் ஆண்டுகளில் 13.13 லட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 10,61,648 பேர், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் 2,51,430 பேர் காணாமல் போயுள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். 3 ஆண்டுகளில் 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இதே காலகட்டத்தில் 1,56,905 பெண்களும், 36,606 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். மகாராஷ்டிரத்தில் 1,78,400 பெண்களும் 13,033 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். ஒடிசாவில் 70,222 பெண்களும், 16,649 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். சத்தீஸ்கரில் 49,116 பெண்களும், 10,817 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
அதேபோல், யூனியன் பிரதேசங்களில், தில்லியில் அதிக அளவிலான பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். தில்லியில் 61,054 பெண்களும், 22,919 சிறுமிகளும், ஜம்மு-காஷ்மீரில் 8,617 பெண்களும், 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.