புதுதில்லி, ஜூலை 1 - குதிரைப் பந்தயத்துக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த புதன்கிழமை விளக்கினார். அப்போது, ‘குதிரைப் பந்தயம்’ என்பதற்குப் பதிலாக, ‘குதிரை பேரம்’ என அவர் பேசியது சமூக வலைதளங்களில் தற்போது கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. குதிரையை விலைக்கு வாங்க பேரம் பேசுவது போல, எதிர்க்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ-க்களை விலைபேசி வாங்குவதில் பாஜக கைதேர்ந்த கட்சியாகும். பாஜக-வையும் குதிரை பேரத்தையும் பிரிக்க முடியாத அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்திலும் தற்போதுதான் குதிரை பேரம் நடத்தி உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்துள்ளது. இந்நிலையில், எண்ணத்தில் இருப்பதுதான் வார்த்தையில் வரும் என்பதைப்போல, ‘குதிரைப் பந்தயம்’ என்பதற்குப் பதில், ‘குதிரைப் பேரம்’ என்று நிர்மலா சீதாராமன் உளறியது எதிர்க்கட்சிகளின் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தனது டுவிட்டர் பக்கத்தில், “உண்மை வெளியே வந்துள்ளது? குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி!” என நையாண்டி செய்துள்ளார். “வாக்குகளை தவிர்த்து நிர்மலா சீதாராமனுக்கு யோசிக்கும் திறன் இருப்பது எனக்கு தெரியும். ஆமாம், குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா டுவிட்டரில் கலாய்த்துள்ளார். “குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கும் நிர்மலா சீதாராமனின் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்” என காங்கிரசின் செயலாளர் வினீத் புனியாவும் நிர்மலா சீதாராமனின் வீடியோவை ரீடுவீட் செய்துள்ளார்.