புதுதில்லி, டிச. 19- பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய “இந்தியா” கூட்டணியின் 4-ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாயன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் து.ராஜா, திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜனதா தளம் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளம் சார்பில் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 28 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். 141 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இடைநீக்கத்தை கண்டித்து டிசம்பர் 22-ஆம் தேதி “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.