நபிகள் நாயகத்திற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்ட பாஜக-வின் செய்தித் தொடர்பாளர்கள் இருவர் மீதும் உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பாஜக செய்தித்தொடர்பாளர்களில் இருவர் நபிகள் நாயகத்திற்கு எதிராக மோசமான முறையில் கருத்துக்களை வெளியிட்டதற்கு எதிராக நாட்டின் பல பாகங்களில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் ராஞ்சி, ஹவுரா முதலான இடங்களில் வன்முறை வெறியாட்டங்கள் நடந்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறது.
பாஜக-வின் செய்தித்தொடர்பாளர்களின் ஆத்திரமூட்டும் மற்றும் அவமதித்திடும் கருத்துக்களுக்கு எதிராகக் கோபம் எழுவது நியாயமானதே என்ற போதிலும், இதற்கெதிராக நடைபெறும் கிளர்ச்சிப் போராட்டங்களில் வன்முறை நிகழ்வது மதவெறி சக்திகள் நிலைமையை மேலும் மோசமாக்கிட உதவியது போலாகிவிடும். எனவே, இப்பிரச்சனையில் மக்கள் அமைதியை நிலைநாட்டிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தில்லிக் காவல்துறை இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்திருக்கிறது. இவற்றில் இவ்விரு செய்தித் தொடர்பாளர்கள் பெயர்கள் மட்டுமல்ல, இந்தப் பிரச்சனையுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாதவர்கள், ஓர் இதழாளர் உட்பட மேலும் 30 பேர்களின் பெயர்களும் இடம்பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். இரண்டு முன்னாள் செய்தித் தொடர்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களின் கனபரிமானத்தை நீர்த்துப்போகச் செய்திடும் நோக்கத்துடனேயே இத்தகைய திசைதிருப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பாஜக-வின் முன்னாள் செய்தித்தொடர்பாளர்கள் இருவர்மீதும், அவர்கள் புரிந்துள்ள குறிப்பிட்ட குற்றத்திற்காகத் தனித்தனியே சட்டத்தின்படி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.