புதுதில்லி, ஜன.10 - “நாடு முழுவதும் நாடாளுமன்றத்திற்கும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது என்ற கருத்துரு வாக்கம் ஜனநாயக விரோதம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ உயர்மட்டக் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “தாங்கள் 2023 அக்டோபர் 18 அன்று அனுப்பியிருந்த கடிதத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடத்துவதற்கு, ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டிருந்தீர்கள். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்கிற கருத்தாக்கத்திற்கு முதற்கண் எங்கள் கடும் ஆட்சேபணைகளைப் பதிவு செய்ய விரும்பு கிறோம். உயர்மட்டக் குழுவின் விதிமுறைகளே, நாட்டில் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்திட ஏற்கனவே முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டதைத் தெளிவாக்குகிறது. அதனை எப்படி அமல்படுத்து வது என்பதைக் குறித்துத்தான் இப்போது ஆலோசனைகள் கேட்கப்பட்டிருக்கின்றன. ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்காகவும், நாட்டில் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்துவதற்குப் பரிந்துரைகளை அளிப்பதற்காகவும்தான் உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டது என்று 2023 செப்டம்பர் 2 அன்று சட்ட அமைச்சகம் தெள்ளத்தெளிவாக- அதற்காக உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் (terms of reference) கூறியிருக்கிறது.
இவ்வாறு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட மற்றும் முடிவுசெய்யப்பட்டுவிட்ட நிகழ்ச்சிநிரல் மற்றும் நோக்கத்தை உள்ளடக்கியுள்ள உயர்மட்டக்குழுவின் அமைப்புச் சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்கிறது. மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவு முதலில் கூறப்பட்ட சமயத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் எதிர்ப்பினையும், கவலையையும் கூறியிருக்கிறது. இதே பொருள்குறித்து அரசியல் கட்சிகளி டம் கருத்து கோரியிருந்த இந்திய சட்ட ஆணையத்திற்கும், 2018 ஜூலை 4 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு குறிப்பை அனுப்பியிருந்தது. அந்தக் குறிப்பில் கூறப்பட்ட நிலைப்பாட்டையே இப்போதும் நாங்கள் தொடர்கின்றோம்.
அந்தக் குறிப்பை இத்துடன் இணைத்திருக்கிறோம். (தனியே தரப்பட்டிருக்கிறது.) ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்துவதற்கான முன்மொழிவைப் பரிசீலனை செய்வது என்பதே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுக்கும் அம்சத்திற்கும் எதிரானதாகும் என்றே நாங்கள் கருதுகிறோம். இந்திய அரசமைப்புச் சட்டம், மக்களின் விருப்பத்தின் குவிமையத்தை வரையறுக்கிறது. அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரை மிகவும் கவித்துவமான முறையில், “இந்திய மக்களா கிய நாம்” என்று தொடங்கி, “எங்களால் இந்த அரசமைப்புச்சட்டம் நமக்கு நாமே நிறை வேற்றிக்கொள்ளப்படுகிறது” என்றே வரை யறுக்கப்பட்டிருக்கிறது.
மக்கள் தங்கள் இறை யாண்மையைத் தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மூலமே மேற்கொள்கிறார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளும், ஆட்சிசெய்பவர்களும், அல்லது அரசாங்கமும் நாடாளுமன்றம்/சட்ட மன்றத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட வர்கள். அரசமைப்புச்சட்டத்தின் இந்த அம்சங்கள் அனைத்தும் அரித்து வீழ்த்தப்படவோ, மாற்றியமைக்கப்படவோ முடியாதவைகளாகும். மேலும், இத்தகைய முன்மொழிவு இயல்பாகவே ஜனநாயக விரோதமான ஒன்றாக இருப்பதாகவும், நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமாகவுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் கொள்கைகளை மறுதலிக்கிறது என்றும் நாங்கள் நம்புகிறோம்.” இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.