2014 முதல் பாஜகவின் மோடி அரசு கல்வியில் மிகப்பெரும் தாக்குதல்களையும் சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமைகளில் மிகக் கொடூரமான ஒடுக்குமுறையையும் ஏவி; கல்வியை மிக விலை உயர்ந்த வணிகப் பொருளாகவும் அதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் முதலீட்டுக்கான பொருளாகவும் மாற்றியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை 2020 புதிய கல்விக் கொள்கை 2020 கல்வியை முழுமையாக வணிகமயமாக்குவது, மத்தியதுவப்படுத்துவது மதவெறி மயமாக்குவது ஆகியவற்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய கல்விமுறையை நவீனப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான நோக்கமும் இலக்கும் இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு கல்விக் கொள்கையாக உள்ளது. இந்த கல்விக் கொள்கை பொதுக் கல்விக்கு அரசு செலவிடுவதை தவிர்க்கும் அல்லது வலுக்கட்டாயமாக மறுக்கும் விதமாக உள்ளது.
புதிய கல்விக் கொள்கை மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகள் அல்லது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமையில் உள்ள பள்ளிகளோடு இணைத்து விட வேண்டும் என கூறுகிறது. மாணவர்கள் குறைவாக உள்ள காரணத்தை கூறி பள்ளிகளை மூடுவதால் மலை கிராமங்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் ஆரம்பக் கல்வி பெறுவது மறுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை அமலாக்கத்தின் விளைவு 2018- 19-ல் நாடு முழுவதும் 10,83,678 ஆக இருந்த அரசு பள்ளிகள் 2021-22யில் 10,23,386 ஆக குறைந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் அதிகப்படியாக 26,274 பள்ளிகளை மாநில பாஜக அரசு மூடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி நிதி நிதி நிறுவனம் (HEFA) அமைப்பை புதிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது இதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும் மானியங்களை நிறுத்திவிட்டு, கடனாக வழங்கும் இந்த உயர் கல்வி நிதி நிறுவனம். கடன்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்கலைக்கழகங்கள் திரும்ப செலுத்த வேண்டும். ஏற்கனவே இந்த நடைமுறையைப் பின்பற்றும் அமெரிக்காவில் 4.5 கோடி மாணவர்கள் கடனாளிகளாகவும் சராசரி ஒரு மாணவருக்கு அமெரிக்க மதிப்பில் 30000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.24,93,901) கல்விக்கடன் இருப்பதாக விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடைமுறை இந்தியாவிலும் அமலானால் என்ன ஆகும். ஆராய்ச்சியை தடுக்கும் மோடி அரசு ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை பல்கலைக்கழகங்களின் ஆய்வு சுதந்திரத்தை பறிக்கும் விதமாகவும் பல்கலைக்கழகங்களின் தனித்தன்மையை சிதைத்தும் அனைத்தையும் மத்தியத்துவப்படுத்தும் விதமாகவும் தேசிய ஆராய்ச்சி மையம் (சேக) என்ற அமைப்பை உருவாக்குகிறது. இதன் மூலம் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளையும் இந்த அமைப்புதான் அனுமதிக்கும். ஆராய்ச்சிக்கான தலைப்பை முடிவு செய்வது, ஒப்புதலளிப்பது துவங்கி அதற்கு உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்தையும் இந்நிறுவனமே முடிவு செய்யும்.
நீட் தேர்வால் தமிழகத்தில் மட்டும் அனிதா முதல் ஜெகதீசன் வரை இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.மாணவர்களை பொதுநுழைவு தேர்வுகள் தற்கொலைக்கு தூண்டுவதோடு மட்டுமின்றி முறைசாரா கோச்சிங் நிறுவனங்களையும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைய செய்துள்ளது. பாடத்திட்டத்தின் மீதான தாக்குதல், சிறுபான்மையினர் கல்வி மீதான தாக்குதல், வேந்தர் என்ற பெயரில் ஆளுநரின் அடாவடித்தனங்கள் என நாடுமுழுவதும் கல்விச் சூழலைச் சிதைக்க மோடிஅரசு முழுவீச்சில் ஏற்பாடு செய்துள்ளது.
மாற்றுக் கல்விக் கொள்கையும் போராட்டமும் 1970 முதல் 54 ஆண்டுகளாக இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாய அறிவியல் பூர்வமான கல்வி கேட்டு போராடிவரும் இந்திய மாணவர் சங்கம் இந்திய கல்வியில் உரிய தலையீடுகளை செய்து நவதாராளமயம் மற்றும் கல்வி வணிகமும் மாணவர்களை விழுங்கிவிடாமல் பாதுகாத்து வருகிறது. கல்விக்கான போராட்ட வரலாற்றிலிருந்தும் மிகச் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கை 2020 க்கு மாற்றான கல்விக் கொள்கை வரைவை முன்வைத்து புதிய கல்விக் கொள்கை 2020ஐ எதிர்க்கிறது.
மாணவர் விரோத, மக்கள் விரோத பாஜக அரசை வீழ்த்துவோம்; தேசத்தை பாதுகாப்போம்; கல்வியை பாதுகாப்போம் என இன்று (ஜனவரி 12) நாடாளுமன்ற வீதிகளில் 16 மாணவர் இயக்கங்களுடன் இணைந்து போராடுகிறது இந்தியமாணவர் சங்கம் மோடி அரசை வீழ்த்தினால் தான் தேசத்தையும் கல்வியையும் பாதுகாக்க முடியும் என்று இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த போராட்டத்தின் மூலம் பிரகடனம் செய்கிறது.