பழனி மலைக்கோவிலுக்குள் வரக்கூடாது என்று மதவாதசக்திகளும், இந்துத்துவ சக்திகளும் பிரச்சனை செய்கிறார்கள். காலம் காலமாக பிற மதத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக, முஸ்லீம் மதத்தினர் பழனி மலைக்கோவிலுக்குள் வருவதும், அங்குள்ள முருகன் கோவில் கருவறைக்கு பின்புறமாக நின்று முருகனை பழனி பாபா என்று வணங்கிச்செல்வதும் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இது பழனி பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் தெரியும்.
பழனி மலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில் கடைகள் வைத்துள்ளனர். சோடாக்கடை, புத்தக கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். ரம்ஜானுக்கு மறுநாள் இஸ்லாமியர்கள் ஆணும், பெண்ணுமாக பழனி மலைக்கோவிலுக்கு சுற்றுலாவிற்கு வருவது போல வந்து மரங்களைச் சுற்றி அமர்ந்து, செல்வார்கள். இந்நிலையில் மதவெறி சக்திகள் தற்போது, பழனிகோவிலுக்கு பிற மதத்தினர் வரக்கூடாது என்று வழக்கு தொடுத்தனர். பழனி மக்கள் இஸ்லாமியர்களை சகோதரர்களாகத்தான் பாவித்து பழகி வருகிறார்கள்.
அத்தகைய பண்பாட்டில் நஞ்சை விதைக்கும் தீர்ப்பாக தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, “பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை” என்று கூறியுள்ளது. இந்த வழக்கில் பழனி மலைக்கு வேற்று மதத்தினர் வரக்கூடாது என்றும், அப்படி வந்தால் பிரமாணப் பத்திரம் எழுதிக்கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளார் நீதிபதி. பழனி முருகன் சங்க காலம் தொட்டு தமிழ்ச் சமூகத்தின், தமிழ் மொழியின் கடவுளாக போற்றப்பட்டு வருகிறார்.
அந்த முருகனை மத ரீதியாக ஒரு குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்கிற பார்வை நீதித்துறைக்கு வந்துள்ளது என்பதை நினைத்துப்பார்க்க வேதனையாக உள்ளது. இந்த தீர்ப்பு தவறானது. இந்த தீர்ப்பு பழனி மலைக்கு வருகிற யாத்திரீகர்கள், சுற்றுலா பயணிகளை கடுமையாக பாதிக்கும். அவர்களின் மனதை புண்படுத்துவதாக இருக்கும். பழனி மலை என்பது இயற்கை சார்ந்த ரசனை மிக்க ஒரு அழகான சுற்றுலாத் தளம். அனைத்துதரப்பு மக்களும் இங்கு வந்து செல்கிறார்கள்.
முருகன் கருவறைக்குள் இருக்கிறார். ஆனால் பழனி மலைக்கே வரக்கூடாது என்பது போல தீர்ப்பளித்துள்ளது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. இந்த வழக்கில் நீதிபதி முன்பாக அரசு தனது வாதத்தை அழுத்தமாக முன் வைத்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.எஸ். பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் இது போன்ற அரசியல் சாசனத்திற்கு விரோதமான தீர்ப்பை வழங்கியுள்ளார். இதனை மேல் முறையீடு செய்ய அரசு முன்வரவேண்டும். ஏனெனில் இந்த தீர்ப்பு ஒரு சமூக சீர்குலைவுக்குத் தான் உதவுமே ஒழிய மத நல்லிணக்கத்திற்கு உதவாது. மக்கள் ஒற்றுமைக்கு உதவாது