india

img

இந்து மக்களுக்கே மோடி அரசின் மீது நம்பிக்கையில்லை! - தொல் திருமாவளவன்

சிறுபான்மையினர், பழங்குடியினர் மட்டுமல்ல இந்து மக்களுக்கே மோடி அரசின் மீது நம்பிக்கையில்லை என்று மக்களவையில் வி.சி.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய வி.சி.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கூறியதாவது.
"மணிப்பூர் மாநில மக்கள், அம்மாநில பாஜக அரசு மற்றும் ஒன்றிய அரசு மீதான நம்பிக்கையை இழந்த நிலையில் எதிர்க்கட்சியினரும் நம்பிக்கையை இழந்து நிற்கிறோம். 
கார்கில் போரில் பங்கேற்ற வீரரின் மனைவியும் பாதிக்கப்பட்டுள்ளார். சொந்த மண்ணிலேயே மக்கள் அகதிகளாக நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறையில் பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் விவகாரம் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் ஆயுத கொள்ளை நடந்ததாக அம்மாநில அரசே ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.  இந்து ராஷ்டிரா அமைப்போம், இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் அழித்தொழிப்போம், அதற்காகவே ஆயுதம் ஏந்தியுள்ளோம் என்று பஜ்ரங் தள் மற்றும் வி.எச்.பி அமைப்பினர் வெளிப்படையாகக் கூறுகின்றனர். குஜராத், ஹரியானா மட்டுமல்ல, ஜெய்ப்பூர் ரயிலில் காவலர் ஒருவர் இஸ்லாமியர்களைத் தேடிச் சென்று, 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளார். இந்தியாவில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பயந்து வாழக்கூடிய அவலம் இருக்கிறது. 

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தலித் மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு இல்லை. இதனால் சிறுபான்மையினர் மட்டுமல்ல இந்து பெரும்பான்மை மக்களுக்கே மோடி அரசின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.

கடந்த 9 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தள்ளுபடி செய்த மோடி அரசு, ஆனால் சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய சமையல் எரிவாயு, தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளன. எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஒ.பி.சி மக்களுக்கான இட ஒதுக்கீடு நிரப்பப்படவில்லை. கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டே இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.