india

ஒரு குரூரமான ஜோக் கேளுங்க சார்! - க.கனகராஜ்

இந்திய மக்களில் 25 கோடிப் பேரை பல்வகை வறுமையிலிருந்து மீட்டு விட்டதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சொல்லியிருக்கிறார். அதற்கு முன்பும் கூட இதுபோன்ற - நம்புவதற்கு வாய்ப்பே இல்லாத, பாஜக ஆட்சியின் கொள்கைகளால் நடந்திருக்க சாத்தியமே இல்லாத இந்த விசயத்தை சொல்லியிருக்கிறார். 

இப்படி அரசல் புரசலாக சொல்வதும், பிறகு அதையே ஒரு ஆவணத்தின் பகுதியாக மாற்றுவதும், பிறகு அந்த ஆவணத்தை மேற்கோள் காட்டி ஆவணத்திலேயே இருக்கிறது; எனவே, அதுதான் உண்மை என்று வாதிடுவதும் அவர்களது வழக்கமாக இருக்கிறது.  இதைச் சொன்னது முதலே இந்தியாவின் பல்வேறு நிபுணர்களும் இதை கேள்விக்கு உள்ளாக்கி வருகிறார்கள். ஆனால், இவர்கள் இதைப்பற்றி கவலைப்படுவதில்லை. 

ஏழை, நடுத்தர மக்களின் வருவாய் வீழ்ச்சி
ஒருபுறம் கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 11 கோடிப் பேருக்கு வேலை மறுத்திருக்கிறார்கள். மற்றொரு புறம் முறைசாரா தொழில்கள் உட்பட கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது. சிறு-குறு, நடுத்தர தொழில்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

 கடந்த மாதம் இந்தியாவில் நுகர்வு பொருளாதாரத்திற்கான மக்கள் ஆய்வு மையம் ஒரு ஆய்வை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வின்படி பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள 20 சதவிகிதம் குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் கோவிட்டுக்கு முந்தைய 2016ஆம் நிதியாண்டில் ரூ. 1.40 லட்சமாக இருந்தது. இது 2021ம் நிதியாண்டில் பாதியாக அதாவது ஆண்டுக்கு சராசரி ரூ. 70 ஆயிரமாக குறைந்துவிட்டது. இதேபோன்று கீழ், நடுத்தர 20 சதவிகிதம் மக்களின் வருமானம் 2014ம் ஆண்டில் ரூ. 1.90 லட்சமாக இருந்தது, 2021ம் ஆண்டில் ரூ. 1.29 லட்சமாக குறைந்துவிட்டது.

 2023ம் ஆண்டில் தான் இது 2016ம் ஆண்டு சராசரி வருவாயை காட்டிலும் மாதம் ரூ. 750/- அதிகரித்திருக்கிறது. பண வீக்கத்தையெல்லாம் சேர்த்தால் இது உயர்வல்ல; மாறாக, குறைவு என்று தான் பொருள். ஏழை குடும்பங்களை பொறுத்தமட்டில் 2023ம் ஆண்டு குடும்ப சராசரி வருமானம் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் குறைந்திருக்கிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் ஏற்கனவே பெற்றிருந்த வருமானத்தில் 2500 ரூபாய் குறைவு. மிக ஏழைகள் மற்றும் கீழ், நடுத்தர வர்க்கம் ஆகிய இந்த 40 சதவிகிதம் பேரையும் எண்ணிக்கையில் சொல்வதென்றால் 57 கோடி பேர். இந்த 57 கோடி பேரின் வருமானம் குறைந்திருக்கிற போது அதுவும் 2016ம் ஆண்டோடு ஒப்பிடும்போதே குறைவாக இருக்கிற போது இவர்கள் எப்படி பல்வகை ஏழ்மையிலிருந்து மீண்டிருக்க முடியும்?

பட்டினித் துயரம் அதிகரிப்பு
2023 ஆம் ஆண்டில் பட்டினிக் குறியீட்டில், இந்தியா 125 நாடுகளில் 111 ஆவது இடத்தில் இருக்கிறது. 2022 இல் இது 107 ஆவது இடத்தில் இருந்தது. பாஜக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் பட்டினிக் குறியீட்டில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிற போது, இது எப்படி சாத்தியமாகும்? 2017 ஆம் ஆண்டில் 76 நாடுகள் பட்டியலில் இந்தியா 55 ஆவது இடத்தில் இருந்தது. பட்டினிக் குறியீட்டைப் பொறுத்தமட்டில், ஊட்டச்சத்துக் குறைவு, எடைக்குறைவு, உயரம் குறைவு, குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படுகிறது.

பட்டினியிலிருந்து அல்லது பல்வகை ஏழ்மை நிலையிலிருந்து இவர்கள் மீட்டிருந்தால், இது எப்படி இவ்வளவு குறைவாக மாறியிருக்க முடியும்? கோவிட் காலத்தில் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய குறியீடுகளில், இதர நாடுகளைப் போலவே இந்தியாவும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று, உண்மை ஊதியமும் கடுமையாக குறைந்திருக்கிறது. இவர்கள்  ‘Multi Dimensional Poverty’ எனப்படும் பல்வகை ஏழ்மை நிலையிலிருந்து 25 கோடி மக்களை மீட்டுவிட்டோம் என்பதற்கு உலகளவில் கணக்கிடப்படும் அம்சங்களிலிருந்து கூடுதலாக தாய் நலம் மற்றும் வங்கிக் கணக்குகளை சேர்த்திருக்கிறார்கள்.

வங்கியில் கணக்கு இருந்தால் போதுமா?
பிரச்சனை என்னவென்றால், இந்தியாவில் ‘ஜன்தன் அக்கவுண்ட்’ என்கிற பெயரில், எந்தவிதமான பணமும் அந்தக் கணக்கில் இருப்பு இல்லையென்றாலும்கூட, அவர்களுக்கு வங்கிக் கணக்குகள் இருக்கும். இந்நிலையில், வங்கிக் கணக்கு இருப்பதும், இல்லாமல் இருப்பதும் அடிப்படையில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில், வங்கிக் கணக்கை ஒரு குறியீடாக கொண்டிருப்பது மக்களை ஏமாற்றுவதற்கான ஏற்பாடே தவிர வேறு ஒன்றுமில்லை.

இது தவிர, இந்தியாவில் 2011-க்குப் பிறகு ஏழ்மை நிலை குறித்த கணக்கீடு செய்யப்படவில்லை. ஆனால், 2017 ஆம் ஆண்டில் ஏழ்மை நிலை குறித்த கணக்கீடை எடுத்தார்கள். ஆனால் அவற்றை வெளியிடவில்லை.  

இதில் பிரச்சனை என்னவென்றால், தேசிய குடும்பநல கணக்கெடுப்பு-5 சொல்வதன்படி, 2015-2016 ஆம் ஆண்டு 53 சதவீதமாக இருந்த இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்த பெண்களின் எண்ணிக்கை, 2019-2021 இல் 53 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு 15 வயது முதல் 49 வயது வரையுள்ள பெண்களிடம் எடுக்கப்பட்டது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் 50 சதவீதத்திற்கு மேல் இருந்தார்கள். அதுவும் 2015-16-இல் இருந்ததைவிட 2019-21 இல் 58 சதவீதமாக அதிகரித்திருக்கிறது என்கிற போது, இதில் வறுமையிலிருந்து மீட்டெடுத்து விட்டார்கள் என நம்புவதற்கு காரணம் என்று ஏதாவது இருக்க முடியுமா?  

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால், உண்மையில் ஏழ்மையை அதிகப்படுத்திவிட்டு, அதை மறைக்க முடியாமல் அல்லது நாம் மட்டும்தான் ஏழ்மையில் இருக்கிறோம்; எல்லோரையும் மீட்டெடுத்துவிட்டார்கள் போலும் என்று  மக்களை நம்பச் செய்வதற்கான ஒரு ஏற்பாடு. இதுவன்றோ, மிகப்பெரிய நகைச்சுவை!