india

17 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு குறைவு

துதில்லி, டிச.26- இந்தாண்டு ராபி பயிர்களின் சாகுபடி பரப்பு 17 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது.  பயிர் விதைப்புக் காலம் முடிவடைய உள்ளதால், கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கோதுமை மற்றும் பயறு வகைகளின் விதைப்பு பரப்பளவும் வெகுவாகக் குறைந்துள்ளது. 

நாட்டில் உள்ள பருப்பு வகைகளின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க பருப்புக்கான இறக்குமதி வரி விலக்கை 2025-ஆம் ஆண்டு மார்ச்  வரை அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் ராபி பயிர்கள் ஒட்டு மொத்தத்தில் 606.86 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு மொத்த சாகுபடி பரப்பு 624.03 லட்சம் ஹெக்டேராக இருந்தது. கடந்தாண்டை விட இந்தாண்டு சாகுபடி பரப்பு சுருங்கியுள்ளது.

கோதுமை கொள்முதலில் இலக்கை எட்டவில்லை
முக்கியப் பயிரான  கோதுமை 308.67 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே விதைக்கப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு இதே காலத்தில் 314.42 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்தது (1.82 சதவீதம் குறைவு) 

கடந்த பத்து மாதங்களில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் உள்நாட்டில் கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,175க்கு என்ற அளவிலேயே உள்ளது.

கடந்த இரண்டாண்டுகளில் மோசமான வானிலை காரணமாக நாட்டின்  கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டில், அரசாங்கம் 44.4 மில்லியன் மெட்ரிக் டன் கொள்முதல் செய்வது என இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் 18.7 மில்லியன் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. 2022-23-ஆம் ஆண்டில் 34.1 மில்லியன் மெட்ரிக் டன்  என இலக்கு நிர்ணயித்திருந்தபோதிலும் 26.2 மில்லியன் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்தது.

மத்தியப்பிரதேசம் தவிர கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பருப்பு உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதால் பயறு வகைகள் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.  இந்த நிலையில் மசூர் பருப்புக்கான இறக்குமதி வரி விலக்கை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. 

நெல் சாகுபடி
கடந்தாண்டு 14.04 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் நடப்பு ராபிப் பருவத்தில் 12.67 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டுள்ளது. ராபி பருவத்தில் கடுகு விதைப்பு மட்டும் சற்று அதிகரித்துள்ளது. அதாவது கடுகு 95.23 லட்சம் ஹெக்டேரில் விதைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிலக்கடலை, குங்குமப்பூ, சீயக்காய், சூரியகாந்தி, ஆளி விதை போன்றவை விதைப்பு சுருங்கிவிட்டது.