புதுதில்லி, டிச.26- அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அரசியல் தலைமைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு ஓர் அழைப்பிதழை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை என்பது மத நம்பிக்கைகளை மதித்திட வேண்டும் என்பதும், ஒவ்வொரு தனி நபருக்கும் அவர்தம் மத நம்பிக்கைகளைப் பின்பற்றிட உள்ள உரிமையைப் பாதுகாத்திட வேண்டும் என்பதுமாகும். மதம் என்பது ஒரு நபரின் தனிப்பட்ட தேர்வு என்றும், அதனை அரசியல் ஆதாயத்திற்கான ஒரு கருவியாக மாற்றக்கூடாது என்றும் அது நம்புகிறது. எனவே, இந்த நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்.
ஒரு மதக் கொண்டாட்டத்தினை, பிரதமர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் மற்றும் இதர அரசு அதிகாரிகள் நேரடியாகவே சம்பந்தப்பட்டு அதனை ஓர் அரசு நிகழ்ச்சியாக ஆர்எஸ்எஸ், பாஜக மாற்றியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமாகும். உச்சநீதிமன்றம் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளதுபோன்று, இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தின் அடிப்படைக் கொள்கை, இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள அரசு, எவ்விதமான மதத்தையும் சார்ந்து இருக்கக் கூடாது. இது ஆளும் தரப்பினரால் இந்த நிகழ்வில் மீறப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.
(ந.நி.)