india

img

சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் தேர்தல் அதிகாரி

சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்த தேர்தல் அதிகாரி அனில் மெஸ்ஸி உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

சண்டிகர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்றது.

மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குல்தீப் குமார் நிறுத்தப்பட்டார். ஆம் ஆத்மியின் 13 உறுப்பினர்கள் , காங்கிரஸ் கட்சியின் 7 உறுப்பினர்கள் என மொத்தம் 20 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், குல்தீப் குமார் தான் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகியிருந்தது.

ஆனால், 16 வாக்குகளைப் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஆம் ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியடைந்தது. தேர்தல் அதிகாரியாக செயல்பட்டவர், நியமன உறுப்பினரான அனில் மாசிஹ். ஆம் ஆத்மியின் எட்டு வாக்குகள் செல்லாதவை என்று கூறிவிட்டு, பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அவர் அறிவித்தார்.

வாக்குச்சீட்டுகளில் அனில் மாசிஹ் திருத்தங்கள் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. அதன் மூலம் சண்டிகர் மேயர் தேர்தலில் நடைபெற்ற முறைகேடு பெரும் சர்ச்சையாக மாறியது.

தேர்தல் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்விற்கு விசாரணைக்கு வந்தது.

இதில், தேர்தல் அதிகாரியிடம் சரமாரியான கேள்விகளை நீதிமன்றம் முன் வைத்தது. உண்மையாக பதிலளிக்கவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும், நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.இதனைத் தொடர்ந்து சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததை தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் ஒப்புக்கொண்டார்.

அடையாளத்துக்காக 8 வாக்குச்சீட்டுகளில் எக்ஸ் எனக் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட அனில் மாசிஹ் மீது கிரிமினல் நடவடிக்கை தொடரவும் உத்தரவிட்டது.

இதனிடையே, மேயராக அறிவிக்கப்பட்டிருந்த பாஜகவைச் சேர்ந்த மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்த நிலையில், இவ்வழக்கில் தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் உச்சநீதிமன்றத்தில் இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

அனில் மாசிஹ் மன்னிப்பு குறித்து எதுவும் தெரிவிக்காத தலைமை நீதிபதி அமர்வு, அடுத்த கட்ட விசாரணைக்காக வழக்கை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.