அமலாக்கத்துறை ரெய்டுக்கு பின் 30 நிறுவனங்கள், பாஜகவுக்கு ரூ.335 கோடி நன்கொடை வழங்கியது நியூஸ் லாண்டரி மற்றும் நியூஸ் மினிட் இணைந்து நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
கடந்த 2018-19 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் தரவுகள், வழக்குக் கோப்புகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகளை வைத்து 'தி நியூஸ் மினிட்' மற்றும் 'நியூஸ் லாண்ட்ரி' இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தின. இந்த ஆய்வில், அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை ரெய்டு நடந்த பிறகு சில நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளதும், மேலும் நன்கொடை வழங்கிய சில நிறுவனங்களுக்கு உரிமங்கள் அல்லது அனுமதிகளை வழங்கப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் படி, கடந்த 5 நிதியாண்டுகளில் அமலாக்கத்துறை ரெய்டுக்கு பின் 30 நிறுவனங்கள், பாஜகவுக்கு ரூ.335 கோடி நன்கொடை வழங்கியுள்ளன. இதே காலகட்டத்தில், 23 நிறுவனங்கள் பாஜகவுக்கு ரூ.187.58 கோடி நன்கொடை வழங்கியுள்ளன; இந்நிறுவனங்கள் 2014-இல் இருந்து ED ரெய்டுக்கு முன்பு வரை நன்கொடை எதுவும் பாஜகவுக்கு வழங்கவில்லை. 4 நிறுவனங்கள், ரெய்டு நடந்து 4 மாதங்களுக்குள் ரூ.9.05 கோடி நன்கொடை வழங்கியுள்ளன. ஏற்கனவே பாஜகவுக்கு நன்கொடை வழக்கும் நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் ரெய்டை தொடர்ந்து அதிகப்படியான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளன. ஒரு நிதியாண்டு பாஜகவுக்கு நன்கொடை அளிக்காத 6 நிறுவனங்கள், மத்திய அமைப்புகளின் நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளன. இந்த 30 நிறுவனங்களின் பட்டியலில் இல்லாத நன்கொடை வழங்கிய 3 நிறுவனங்கள் ஒன்றிய பாஜக அரசிடமிருந்து சட்டத்துக்குப் புறம்பாக உதவிகளைப் பெற்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.