புதுதில்லி, ஆக.1- முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் ஆட்சியாளர்களின் பிரச்சாரம், நாட்டைக் காக்க வேண்டிய காவலர்கள் மத்தியிலும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதையே ரயிலில் காவலர் ஒருவர் முஸ்லீம்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையல் கூறியிருப்பதாவது:
மும்பை சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்றில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர், தன்னுடைய மூத்த அதிகாரி ஒருவரையும், பயணம் செய்த மூன்று பயணிகளையும் பயங்கரமான முறையில் சுட்டுக்கொன்றுள்ளார். இதனை இவருடைய குழப்பமான மனநிலையால் விளைந்த நடவடிக்கைகள் என்று புலனாய்வு அமைத்திட்ட அதிகாரிகள் ஆரம்பத்தில் கூறியுள்ள விளக்கத்தைப் போன்று பார்க்க முடியாது. கொல்லப்பட்ட பயணிகள் அனைவரும் முஸ்லீம்கள். துப்பாக்கி ஏந்தியிருந்த காவலர் முதல் பெட்டியிலிருந்து அடுத்த பெட்டிக்கு முஸ்லீம்களைக் குறி வைத்தே கொல்வதற்காகச் சென்றிருக்கிறார். ஆட்சியில் உள்ளவர்கள் இரவும் பகலும் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதன் நேரடி விளைவாகும் இது. வெளியாகியுள்ள வீடியோவிலிருந்து (இந்த வீடியோ இன்னமும் அதிகாரபூர்வமானதாக அறிவிக்கப்படவில்லை), அந்த நபர் பாகிஸ்தானால் தலைமை தாங்கப்படும் முஸ்லீம்கள் என்று குறிப்பிட்டிருப்பதும், அவர்கள் தொடர்ந்து இந்தியாவில் வாழ வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் மோடிக்கும், யோகிக்கும் வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாஜக தலைவர்கள் பயன்படுத்திடும் வார்த்தைகளையே அவர் எதிரொலித்திருக்கிறார்.
வெறுப்புப் பேச்சுக்கள் நாட்டிற்குப் பேரழிவு தரக்கூடிய விளைவுகளுக்கு வழிவகுக்கிறது என்றும், இவ்வாறு பேசுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் திரும்பத்திரும்ப எச்சரித்திருக்கிறது.
இப்போது நடைபெற்றுள்ள சம்பவம், ஆட்சியாளர்கள் மத்தியில் காணப்படும் வெறுப்பை உமிழும் மதவெறிச் சிந்தனை குடிமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய நபர்கள் மத்தியில் எந்த அளவிற்குப் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மிகவும் கண்டிக்கத்தக்க இந்த நிகழ்வானது, ஆட்சியாளர்களின் இந்துத்துவா நச்சு நிகழ்ச்சிநிரல் நாட்டை எந்த அளவிற்கு அதள பாதாளத்திற்கு இட்டுச் சென்றுள்ளது என்பதற்கான ஓர் எச்சரிக்கை மணியாகும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(ந.நி.)