நீதித்துறையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் முதலைக் கண்ணீர் வடித்து “வழக்கறிஞர்கள் குழு” ஒன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருப்பதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் விகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மற்றும் பொதுச் செயலாளர் சுரேந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
உச்சநீதிமன்றத்தின் தேர்தல் பத்திரங்கள் தீர்ப்புரை சம்பந்தமாக தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்குக் கைமாறு செய்தது வெட்டவெளிச்சமாகி இருப்பது தொடர்பாக, நீதித்துறையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் முதலைக் கண்ணீர் வடித்து வழக்கறிஞர்கள் குழு ஒன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் சமீபத்தில் எழுதியுள்ள கடிதத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. இந்தக் கடிதமானது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், அரசமைப்புச்சட்ட உரிமைகளையும், அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காகவும், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவும் போராடிக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் பொறுப்புள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராகவும் நீதித்துறையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அவதூறை அள்ளி வீசியிருக்கிறது.
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான அதிகாரம் ஆகியவை நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் அங்கமாகவும், ஜனநாயகத்தின் முதுகெலும்பாகவும் திகழ்கின்றன. இப்போதைய ஆட்சியாளர்கள் இதன்மீது நேரடியாகத் தாக்குதலைத் தொடுத்துள்ளார்கள். நீதித்துறையின் சுதந்திரம் உட்பட அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிராக மிகவும் நுட்பமான முறையில் சூழ்ச்சித் திட்டங்களை ஏற்படுத்தியும், நேரடியாகவும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள்.
நாடாளுமன்றமே உச்சநீதிமன்றத்தைவிட அதிகாரம் மிக்கது என்ற பெயரில் (in the name of supremacy of Parliament) “நீதித்துறை மறு ஆய்க்கும்,” “அடிப்படைக் கட்டமைப்புக்கும்” எதிராக குடியரசுத் துணைத் தலைவரும், சட்ட அமைச்சருமே கடும் தாக்குதலையும், விமர்சனத்தையும் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் அடிப்படையில்தான் நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்குத் தேவை என்றும் அவர்கள் கூறத்தொடங்கி இருக்கிறார்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளை மாற்றுவதிலும் அரசாங்கம் நேரடியாகட்த தலையிட்டிருக்கிறது. நீதியரசர் குரேஷி மற்றும் நீதியரசர் டாக்டர் எஸ். முரளிதர் ஆகியவர்களின் மாற்றல்களிலும் நீதித்துறைக்கு அப்பாற்பட்டு அதீத அரசியல் காரணங்களுக்காகத் தலையிட்டது.
நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் விதத்தில் நீதிபதிகள் ஓய்வுபெற்றபின் அவர்களை உயர்பதவிகளில் நியமனம் செய்திடும் வேலைகளிலும் மோடி அரசாங்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்றபின்னர் மோடி அரசாங்கத்தால் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்., உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஆறு வாரங்களுக்குள்ளாகவே நீதிபதி அப்துல் நசீஸ், ஆந்திரப்பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
மேலும் ஒன்றிய அரசாங்கம், உச்சநீதிமன்ற கொலிஜியம் முறை மூலமாக பல்வேறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாற்றல்கள் மற்றும் நியமனங்கள் செய்திடுவதையும் அவமதித்திடும் விதத்திலும், தங்களுக்கு வேண்டிய நபர்களை மட்டுமே தெரிவு செய்திடும் விதத்திலும் நடந்து வந்திருக்கிறது. இதேபோன்றே உயர்நீதிமன்றங்களின் கொலிஜியம் முறை அடிப்படையிலான நியமனங்களுக்கும் நடந்தது. கொலிஜியம் வற்புறுத்தியும்கூட ஆட்சியாளர்கள் செவிசாய்த்திடவில்லை. கொலிஜியம் பரிந்துரை செய்திட்ட வேட்பாளர்களை நியமனம் செய்ய மறுத்தது. இவை அனைத்தும் நீதித்துறையின் சுதந்திரத்தைக் கடுமையாக மீறிய விஷயங்களாகும். இந்த விஷயங்கள் தொடர்பாக இந்த “வழக்கறிஞர்கள் குழு” வாயே திறக்கவில்லை. நீதித்துறையைக் காப்பாற்ற முன்வரவில்லை. அதுமட்டுமல்ல இத்தகைய ஜனநாயகவிரோத, அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரான, நீதித்துறை சுதந்திரத்திற்கு எதிரான இந்நடவடிக்கைகளை வெளிப்படையாக ஆதரித்தே வந்திருக்கிறது.
இந்த வழக்கறிஞர்கள் குழு இப்போது வெளியாகியுள்ள தேர்தல் பத்திரம் சம்பந்தமான அதிமுக்கிய வழக்கிலும் கார்ப்பரேட் ஏகபோக முதலாளிகளுடன் இணைந்து நின்று, உச்சநீதிமன்றம் மேற்படி தீர்ப்பை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தாமாகவே கடிதம் எழுதி, அவரின் கடுமையான கண்டனத்திற்கு ஆளானது.
மேலும் உச்சநீதிமன்றமானது 2023 தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகளின் கீழ் (IT Amendment Rules, 2023), மோடி அரசாங்கத்தின் எதேச்சாதிகாரமான, ஜனநாயக விரோத அறிவிக்கையை நிறுத்தி வைத்ததும் இந்த வழக்கறிஞர்கள் குழுவினை எரிச்சலடைய வைத்திருக்கிறது.
இந்த “வழக்கறிஞர்கள் குழுவின்” அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நாட்டிலுள்ள அனைத்து வழக்கறிஞர்களின் பொதுவான கருத்து கிடையாது. நீதித்துறையை மீட்பதற்காக வந்திருக்கிறோம் என்று முகமூடி அணிந்து வந்து மக்களை ஏமாற்றும் முயற்சிகளேயாகும்.
இதன் முயற்சியை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. நாட்டிலுள்ள அனைத்து வழக்குரைஞர்களும், மக்களும், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் இத்தகைய ஆரோக்கியமற்ற நடைமுறைகளுக்கு எதிராகவும், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்திடவும் ஒன்றுபட்டுநின்று குரல் எழுப்பிட வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் அறைகூவி அழைக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
(தமிழில்: ச.வீரமணி)