தில்லியில் இந்தர்லோக்கில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளியன்று தொழுகைக்கு ஏராளமானோர் கூடிய நிலையில், மசூதிக்குள் இடநெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக சிலர் சாலையில் நின்று தொழுகை செய்யவேண்டிய நிலை ஏற்பட்ட நிலையில், சாலையில் தொழுகையில் ஈடுபட்டி ருந்த இஸ்லாமியர்கள் சிலரை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லி காவல்துறையைச் சேர்ந்த காவலர் எட்டி உதைத்தார். இந்த வீடியோ வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப் பட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தாக பிரச்சனையை திசை திருப்பியுள்ளது.
‘இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த பிரபல தொலைக்காட்சி நடிகை டோலி சோகி வெள்ளியன்று மும்பையில் காலமானார். மஞ்சள் காமாலையால் டோலி சோகியின் சகோதரியான மந்தீப் சோகி வியாழனன்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தோட்டம், கார் கழுவுதல், கட்டுமானப் பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) விண்ணப்ப வலைதளங்களின் சில பிரிவுகள் “அவசர பராமரிப்பு” காரணமாக முடக்கப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் பெரும் பாலான நாட்கள் ஒன்றிய அரசின் ஆர்டிஐ விண்ணப்ப போர்டல் பராமரிப்பு பணி காரண மாக வேலை செய்யவில்லை.
ராஜஸ்தானின் கோட்டா நகரில் மகா சிவ ராத்திரி ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி 14 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் இருவர் கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில அமைச்சர் ஹீராலால் நகர் தெரிவித்துள்ளார்.
இம்பால்
மணிப்பூரில் ராணுவ அதிகாரியும் கடத்தல்
பாஜகவின் இழிவான பிளவு வாத அரசியலால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 11 மாதங்களாக பற்றி எரிந்து வருகிறது. வன்முறைக்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக முகாம்களில் உயிர் பிழைத்து வருகின்றனர். வன்முறைக்கு காரணமான மெய்டெய் மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கக் கூறிய உத்தரவை உயர்நீதிமன்றம் வாபஸ் பெற்ற பின்பும், மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறையவில்லை. நீதிமன்ற வாபஸ் உத்தர வுக்குப் பின்னர் மெய்டெய் பிரிவினர் மாநி லம் முழுவதும் தொடர்ந்து மிகமோசமான அளவில் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
கடந்த வாரம் இம்பால் கிழக்கு பகுதியின் கூடுதல் காவல் கண்காணிப்பா ளரான அமித் சிங்கை மெய்டெய் பிரிவைச் சேர்ந்த “ஆரம்பை தென்க் கோல்” என்ற அமைப்பின் 200 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தியது. பாதுகாப்புப் படை நீண்ட நேரம் போராடி நள்ளிரவில் அமித் சிங்கை குண்டுக் காயங்களுடன் மீட்டது. இந்த கடத்தல் சம்பவத்திற்கு பிறகு மணிப்பூர் மாநிலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளியன்று காலை 9 மணியளவில் சாரங்பட் மாமாங் லெய்கையில் இந்திய ராணுவத்தின் ஜேசிஓ கொன்சம் கேடா சிங்கை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். வெள்ளி யன்று மாலை வரை தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பொழுதிலும், அவர் எங்கே இருக்கிறார் என்று இதுவரை தெரியவில்லை. மணிப்பூரில் வன்முறை தீவிரமடைந்ததிலிருந்து நடக்கும் நான்கா வது கடத்தல் சம்பவம் இதுவாகும்.
சென்னை
என்எல்சி நிறுவன பங்கு விற்பனை முடிவை திரும்பப் பெற வேண்டும்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 7 விழுக்காடு பங்குகளை விற்று, மார்ச் 7-ல் இருந்து 11 ஆம் தேதிக்குள் ரூ. 2,000 கோடி முதல் ரூ. 2200 கோடி வரை நிதி திரட்ட ஒன்றிய அரசு அறிவிப்பு வெளி யிட்டிருக்கிறது. இந்த பங்கு விற்பனை முடிவை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும்; இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுதில்லி
வயநாட்டில் ராகுல் காந்தி போட்டி
மக்களவைத் தேர்தலுக்கான 39 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெள்ளியன்று மாலை வெளியிட்டார். இந்த பட்டியலில் 15 பேர் பொதுப்பிரிவு வேட்பாளர்கள்; 24 பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், ராகுல் காந்தி மீண்டும் வயநாட்டில் (கேரளா) போட்டியிட உள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழாவிலும் (கேரளா), சசிதரூர் திருவனந்தபுரத்திலும் (கேரளா), சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் ராஜ்நந்த்காவிலும், மூத்த தலைவர் ஜோத்ஸ்னா மஹந்த் கோர்பாவிலும் (சத்தீஸ்கர்) போட்டியிடுகின்றனர்.
சென்னை
சிறைமீண்ட மீனவர்களால் மீண்டும் துரத்தியடிக்கப்பட்ட பாஜகவினர்
பிப்ரவரி 7 அன்று இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் தங்களது இரண்டு படகுகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிகளில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 2 படகுகளில் சென்ற 18 மீனவர்களை கைது செய்தனர். அத்துடன் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இராமேஸ்வரம் மீனவர்களின் பல கட்டப் போராட்டத்திற்குப் பின், இலங்கை அரசு 18 மீனவர்களை விடுதலை செய்தது. அவர்கள், கொழும்புவில் இருந்து விமானம் மூலம் வெள்ளியன்று சென்னை வந்தனர். இந்நிலையில், அவர்களை வரவேற்க தமிழக பாஜக மீனவரணி நிர்வாகிகள் சால்வையுடன் சென்றனர். ஆனால், அதனை நிராகரித்த மீனவர்கள், “நாங்கள் ஒன்றும் சாதனை செய்துவிட்டு வரவில்லை. சிறையில் இருந்து வருகிறோம்” எனக் கூறி சால்வையை வாங்க மறுத்து விட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பும், இதேபோல இலங்கை சிறையிலிருந்து 20 மீனவர்களை பாஜக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்க முயன்றபோது, கடுப்பான மீனவர்கள் ”முதலில் படகுகளை மீட்டுத் தருவதற்கான வழிவகையை செய்யுங்கள்” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பாஜக நிர்வாகிகளை துரத்தியடித்தது குறிப்பிடத்தக்கது.