புதுதில்லி, மார்ச் 25- தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மதவாதத்திற்கு இடமில்லை என்கிற முழக்கத்துடன் இடதுசாரி மாணவர் கூட்டணி, மாணவர் பேரவைத் தேர்தலை சந்தித்தது. இறுதி முடிவு வந்தபோது, சதி முயற்சிக்கான அனைத்து ஆயத்தங்களையும் மேற்கொண்ட ஏபிவிபி, ஜேஎன்யுவில் படுதோல்வி கண்டது. இடதுசாரி மாணவர் கூட்டணி அனைத்து இடங்களிலும் மகத்தான வெற்றிபெற்றது. இடதுசாரி மாணவர் அமைப்புகளான இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ), ஏஐஎஸ்ஏ, ஏஐஎஸ்எப் மற்றும் டிஎஸ்எப் அடங்கிய ஐக்கிய இடதுசாரி மாணவர் கூட்டணி, ஏபிவிபியை தோற்கடித்தது.
இடதுசாரி மாணவர் கூட்டணியின் வேட்பாள ரான தனஞ்சய் (ஏஐஎஸ்ஏ), பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவராக 922 வாக்குகள் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனஞ்சய் பெற்ற வாக்குகள் 2598. ஏபிவிபியின் உமேஷ் சந்திரா அஜ்மிரா பெற்ற வாக்குகள் -1676. இடதுசாரி மாணவர் கூட்டணியின் ஆதரவுடன் பிரயன்ஷி ஆர்யா (பாப்சா), மாணவர் பேரவையின் பொதுச் செயலாளராக 926 வாக்குகள் பெரும்பான்மை யுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரயன்ஷி 2887 வாக்குகள் பெற்றார். ஏபிவிபியின் அர்ஜுன் ஆனந்த் 1961 வாக்குகள் பெற்றார். வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இடதுசாரி மாணவர் கூட்டணியின் பொதுச் செயலாளர் வேட்பாளர் திடீரென திட்டமிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே, இடதுசாரிக் கூட்டணி, பிரயன்ஷியை ஆதரித்தது. மாணவர் பேரவையின் துணைத் தலைவராக, இந்திய மாணவர் சங்கத்தின் அவிஜித் கோஷ் 2409 வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏபிவிபியின் தீபக் சர்மா (1482)வை விட அவிஜித் கோஷ் கூடுதலாக 927 வாக்குகள் பெற்றார். பேரவையின் இணைச் செயலாளராக ஏ.ஐ.எஸ்.எப் வேட்பாளர் எம்.ஓ.சஜித் 2574 வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏபிவிபியின் கோவிந்த் டாங்கி 2066 வாக்குகள் பெற்றார். தேர்தலில் மொத்தம் 5656 வாக்குகள் பதிவாகின. மொத்தம் உள்ள 42 கவுன்சிலர்களில் 30 பேர் இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.
இந்திய எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை: யெச்சூரி
தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மீண்டும் இடதுசாரி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இடதுசாரி களின் வெற்றி இந்தியாவின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை என்று தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
“தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள இடது முன்னணியினருக்கு எனது வாழ்த்துகள். ஏ.பி.வி.பி. அமைப்பினரின் வன்முறை வழிமுறைகளும், கடைசி நிமிடத்தில் இடது வேட்பாளர் ஸ்வாதி சிங்கின் வேட்புமனுவை நிராகரித்ததும் அவர்களின் தோல்வி பயத்தை அம்பலப்படுத்தி விட்டது. இத்தனை வெட்கக்கேடான செயல்களில் அவர்கள் ஈடுபட்டாலும், ஜேஎன்யு மாணவர்கள் தங்களது முற்போக்கு செறிந்த மரபை எப்போதும் போல நிரூபித்துவிட்டனர். வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஒன்று சேர்ந்து பாஜகவை வீழ்த்துவார்கள்” என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.