ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 98 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக நாடாளுமன்றத்தில் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேரள எம்.பி வி.சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார், ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 98 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஐ.ஐ.டி-யில் 39 மாணவர்களும், மத்திய பல்கலைக்கழகங்களில் 25 மாணவர்களும், என்.ஐ.டி-யில் 25 மாணவர்களும், ஐ.ஐ.எம்-யில், 4 மாணவர்களும், ஐ.ஐ.எஸ்.இ.ஆர்-யில் 3 மாணவர்களும், ஐ.ஐ.ஐ.டி-யில் 2 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2023-ல் மட்டும் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் 20 மாணவர்கள் தற்கொலை. ஐஐடி-யில் 7 பேரும், மத்திய பல்கலைக்கழகங்களில் 9 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தனிமைப்படுத்துதல், அத்துமீறல்கள், வன்முறைகள், குடும்ப பிரச்சனைகள் மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.