புதுதில்லி:
கடந்த டிசம்பர் 10 அன்று, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மேற்குவங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் ஏராளமான பாஜகவினர் கார்களில் அணிவகுத்துச்சென்றனர்.இந்நிலையில், அவர்கள், கொல் கத்தாவிலிருந்து டைமண்ட் ஹார்பர் தொகுதிக்குச் சென்றபோது, கல்வீச்சு நடத்தப்பட்டதாகவும், இதில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா உள்ளிட்டோரின் கார்கள் சேதமடைந்ததுடன், கைலாஷ்விஜயவர்கியா மற்றும் பாஜக துணைத் தலைவர் முகுல்ராய் உள்ளிட்டோர் காயம்அடைந்ததாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
இதனைக் காரணமாக வைத்து, மேற்குவங்க அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பிய மத்திய உள்துறை அமைச்சகம், மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளையும் மாநில அரசுப் பணியிலிருந்து, மத்திய அரசுப் பணிக்கு இடமாற்றியது. இதுதொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே, கொல்கத்தா கல்வீச்சை காரணமாக வைத்து, பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பும், குண்டு துளைக்காத காரும் வழங்கி, மத்திய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆயுதம் தாங்கிய 7 கமாண்டோக்கள் வர்க்கியாவுடன் செல்வார் கள். 2 தனி பாதுகாப்பு அதிகாரிகள் உடனிருப்பார்கள். வர்க்கியாவின் வீட்டில் எந்நேரமும் 2 முதல் 8 தொழிலக பாதுகாப்புப் படையினர் காவலுக்கு இருப்பார்கள். மொத்தம் அவருக்கு 22 பேர் பாதுகாப்பு வழங்குவார்கள் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.