புதுதில்லி:
நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. என்று மத்திய சுற்றுச்சூழல்- வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள சிறுத்தைகள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தில்லியில் வெளியிட்டு, கூறியதாவது:
புலி, சிங்கம், சிறுத்தைகள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது, பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் நாட்டின் வனவிலங்கு மற்றும் பல்லுயிர் பெருக்க வளர்ச்சிக்கு சான்றாக உள்ளது. இந்தியாவில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு மதிப்பீட்டில் இதன் எண்ணிக்கை 7,910 ஆக இருந்தது. தற்போது 60 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.தற்போது மத்தியப்பிரதேசத்தில் 3,421, கர்நாடகாவில் 1783 , மகாராஷ்டிராவில் 1690 ஆகிய எண்ணிக்கையில் சிறுத்தைகள் உள்ளன. இந்தியாவில் புலிகளை கண்காணிக்கும் முறை, சிறுத்தைகள் போன்ற இனங்களையும் கணக்கிட வழிவகுத்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில்தான்,சிறுத்தைகள் எண்ணிக்கையும் மதிப்பிடப்பட்டன. சிறப்பு மென்பொருளை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 51,337 சிறுத்தை போட்டோக்களில், 5,240 இளம் சிறுத்தைகள் அடையாளம் காணப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.