india

img

ஏழைகளை அதிகமாக்கியதே மோடியின் 7 ஆண்டு சாதனை.... பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு.. வேலையில்லாத் திண்டாட்டம்...

 புதுதில்லி:
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி, இரண்டாவது முறையாகப் பதவியேற்ற ‘2019 மே 30’-ஐ, கொரோனா கோரத் தாண்டவத்திற்கு இடையிலும் பாஜகவினர் கடந்த ஞாயிறன்று நாடு முழுவதும் கொண்டாடித் தீர்த்தனர்.

நரேந்திர மோடி அரசு தொடர்ந்து7 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது என்று சமூகவலைதளங்களில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.‘இந்த 7 ஆண்டுகளில், நரேந்திரமோடி, தனது உறுதியான, முழுமையான நலத்திட்ட கொள்கைகளால், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைமேம்படுத்தி, தனது வலுவான தலைமையால் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றியுள்ளார்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பாராட்டித் தள்ளினர்.

இந்நிலையில், மோடியின் 7 ஆண்டு ஆட்சியில் வறுமை, வேலையின்மை அதிகரித்ததும், பொருளாதாரம் மிகமோசமான வீழ்ச்சிக்குப் போனதும்தான் சாதனைகள் என்று காங்கிரஸ் கட்சி குற்றப்பத்திரிகை ஒன்றை வெளியிட்டுள்ளது. காணொலி மூலம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்த குற்றப் பத்திரிகையை வெளியிட்டுக் கூறியதாவது:

1. ‘நாடு விடுதலை அடைந்ததற்குப் பின், கடந்த 73 ஆண்டுகளில் அமைந்த மிகவும் பலவீனமான அரசுமோடி அரசுதான். 2014 ஆம் ஆண்டில்ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பதவியை விட்டு இறங்கியபோது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) 8.1 சதவிகிதமாக இருந்தது.ஆனால், இது 2019-20 ஆம் ஆண் டில்- அதாவது கொரோனாவுக்கு முன்பே 4.2 சதவிகிதமாக குறைந்து விட்டது. அதைத்தொடர்ந்து 2020-21 முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 24.1 சதவிகிதமாகவும், இரண்டாவது காலாண்டில் மைனஸ் 7.5 சதவிகிதமாகவும் உள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு- கிட்டதட்ட மைனஸ் 8 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

2. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றவாக்குறுதியின் பேரில் மோடி ஆட்சிக்குவந்தார். இதன்படி 7 ஆண்டுகளில் மோடி அரசு 14 கோடி வேலைகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் மோடி ஆட்சியில்தான் இந்திய நாட்டின்வேலையில்லாதோர் விகிதம் கடந்த45 ஆண்டுகளிலேயே இல்லாத அளவிற்கு மிக அதிகமாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர்.

3. ஏற்கெனவே இருக்கும் நாட்டின்நிலையற்ற நிலைமையை பணவீக்கம்மேலும் மோசமாக்கி இருக்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க் கும், கடுகு எண்ணெய் லிட்டருக்கு 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நாட்டில் அதிகப்படியான குடும்பங்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு (எல்பிஜி கேஸ்) சிலிண்டர் 800 முதல் 900 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறது. சமையலுக்கு உதவும் பருப்புவகைகளின் விலையும் ஏறிக் கொண்டே இருக்கிறது.

4. விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விவசாயிகளின் மீது உணர்ச்சியற்ற அணுகுமுறையையே மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை சிறுகுறு விவசாயிகளிடம் இருந்து பிடுங்கிகார்ப்பரேட் கம்பெனிகளிடம் கொடுப்பதையே மோடி அரசு விரும்புகிறது. எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்த மோடி அரசு அதில்இருந்து நேர் எதிரான திசையில் சென்றுகொண்டிருக்கிறது.

5. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மூலம் நாட்டில் 27 கோடி மக்கள்தீவிர வறுமையிலிருந்து வெளியேறினர். ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின் இந்தியாவில் நடுத்தர வர்க்கத்திலிருந்து சுமார் 3 கோடியே 20 லட்சம் பேர்ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று 2020-ஆம் ஆண்டில் ‘பீவ் ஆய்வு மையம்’ (PEW Research Centre) வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

6. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் மோடி அரசு தோல்வி அடைந் துள்ளது. கொரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கைகளை மோடி அரசு குறைத்துக் காட்டி வருகிறது. நாட்டில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் கிடைக்காததற்கு மோடி அரசின் தடுப்பூசி கொள்கையே காரணம். இந்திய மக்களுக்கு தடுப்பூசி கிடைக்காத நிலையில், 6.63 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? என்பதற்கு இப்போதுவரை பதில் இல்லை.

7. 56 இன்ச் மார்பு கொண்டவர் என்று பாஜக-வினரால் புகழப்பட்ட மோடி ஆட்சியில்தான் சீனா தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்திலும், லடாக் பகுதியிலும் ஊடுருவி வருகிறது. இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்து வருகிறது. இவைதான் கடந்த ஏழு ஆண்டுகளில் மோடி அரசின் சாதனைகளாக உள்ளன.இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

;