india

img

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்; உடனடியாக தீர்வு என சு.வெங்கடேசனிடம் அமைச்சர் உறுதி

ஜேஇஇ தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணப்படும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் ஒன்றிய அமைச்சர் உறுதியளித்தார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு;

JEE 2023 விண்ணப்பம் செய்யும் நடைமுறை துவங்கப்பட்டுள்ளது. இதில் 2020- 21 இல் 10 ஆம் வகுப்பு முடித்த தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பம் செய்வதில் பிரச்சனை எழுந்துள்ளது. லட்சக் கணக்கான மாணவர்கள் இதனால் தவிப்பிற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்கள்.

2020 - 21 கல்வியாண்டில் கோவிட் காரணமாக பொதுத் தேர்வுகளை நடத்த இயலாததால் "அனைவரும் தேர்ச்சி" (All Pass) என்ற முடிவு தமிழக அரசால் எடுக்கப்பட்டது. ஆகவே மதிப்பெண் அட்டையில் "தேர்ச்சி" (Pass) என்று மட்டுமே பதிவாகி இருக்கும்.

தற்போது JEE 2023 விண்ணப்பிக்கும் போது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்களை சம்பந்தப்பட்ட இணைய தள படிவத்தில் கேட்கப்பட்டுள்ளது. மதிப்பெண் குறிப்பிடப் படவில்லையென்றால் விண்ணப்பம் பதிவாக மறுக்கிறது. இதனால் லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது.

உடனடியாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தலையிட்டு இப் பிரச்சினையை சரி செய்து தீர்வு வழங்க வேண்டுமென்று கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களிடம் கடிதம் ஒன்றை அளித்து நேரில் வலியுறுத்தினேன்.

இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தமிழக மாணவர்களுக்கு தீர்வு வழங்குவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாக்குறுதி தந்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.