india

img

பாரத் பந்த் மகத்தான வெற்றி.... வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாடு முழுவதும் ஆவேசம்....

புதுதில்லி:
அனைத்து விவசாய சங்கங்கள் அறைகூவல் விடுத்த பாரத் பந்த் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 

பஞ்சாப், ஹரியானா, பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்பட ஒட்டுமொத்த நாடும் பாரத் பந்த் போராட்டத்தால் ஸ்தம்பித்தது. இப்போராட்டத்தின் மகத்தான வெற்றியை பிரகடனம் செய்த அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, “எங்கள் கோரிக்கையில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். புதிய வேளாண் சட்டங்கள் மூன்றும் திரும்பப் பெறப்பட வேண்டும். இதில் ஒன்றிரண்டு திருத்தங்கள் செய்வது என்பதை நாங்கள் ஏற்கவில்லை. இந்தச் சட்டங்களில் ஒன்றிரண்டு திருத்தங்கள் மேற் கொள்ளப்படுவதன் மூலம் அதன் அடிப்படைத்தன்மை மாறிவிடாது. எனவே அவற்றை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதற்காகவே நாங்கள் பாரத் பந்த் அறிவித்தோம். இப்போதும் அரசாங்கம் எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், போராட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும்” என்று கூறினார். டிசம்பர் 8 பாரத் பந்த் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகரமாக நடைபெற்றது.

தமிழகம்
தமிழகம் முழுவதும் பாரத் பந்த் போராட்ட அழைப்பை ஏற்றுசெவ்வாயன்று முழு கடையடைப்பு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் திமுக - தோழமைக் கட்சிகள் சார்பிலும் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பிலும் விவசாயத்தொழி லாளர் சங்கம் சார்பிலும் மறியல் போர்-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தெலுங்கானா
தெலுங்கானா மாநிலத்தில், பாஜகவைத் தவிர ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்ததால், போராட்டம் முழு வெற்றி பெற்றது. பாஜக தவிர, அனைத்துவிவசாய சங்கங்களும் தொழிற் சங்கங்களும், ஊழியர் சங்கங்களும் பாரத் பந்த்திற்கு ஆதரவாக இருந்தன. வர்த்தக மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் அனைத்தும் பணிமனைகளை விட்டு வெளியே எடுக்கப்படவில்லை.  பாரத் பந்த் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் என்று விவசாய சங்கங்கள் கூறியிருந்த போதிலும், தெலுங்கானா வில் காலையிலேயே போராட்டம் துவங்கிவிட்டது. பந்த்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சியினரும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தினர். ஆளும் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் உட்பட அனைவரும் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேச மாநிலத்திலும் போராட்டம் முழு வெற்றி பெற்றது. கடைசி நிமிடத்தில் மாநில அரசாங்கம், பந்த்திற்கு ஆதரவு தெரிவித்திடத் தீர்மானித்ததை அடுத்து,அரசுப் போக்குவரத்துப் பேருந்து கள் ஓடவில்லை. மாநில அரசு அனைத்துப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்தது. கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.  

அசாம்
அசாம் மாநிலத்திலும் இயல்பு வாழ்க்கை முடங்கியது.வாகனங்கள் சாலைகளில் ஓடவில்லை. வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பல்வேறு தொழிற்சங்கங்களும், போக்குவரத்து சங்கங்களும் பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்தன. அசாமில் காங்கிரஸ், அசாம் ஜதியா பரிஷத் உட்பட 13 அரசியல் கட்சிகள்போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்திருந்தன.  

மேற்குவங்கம்
மேற்கு வங்கத்தில் பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.  பல மாவட்டங்களில் இடதுசாரிக்கட்சிகளைச் சேர்ந்த முன்னணி ஊழியர்கள் ரயில் மற்றும் சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

;