india

img

பொய் செய்திகள் அச்சுறுத்தலில் இந்தியா முதலிடம்!

பொய் செய்திகள் அச்சுறுத்தலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி 10-ஆம் தேதி உலக பொருளாதார மன்றம், வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் மற்றும் நாடுகளுக்கிடையே ஏற்படும் போர்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், அடுத்த பத்து ஆண்டுகளிலும் நாம் எதிர்கொள்ளக்கூடிய மிகக் கடுமையான அபாயங்கள் என்னென்ன என்பதை விளக்கும் வகையில் ”உலகளாவிய அபாயங்கள் குறித்த அறிக்கை 2024 என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், தவறான தகவல்களை பரப்புதல், வானிலை நிகழ்வுகள்,சைபர் பாதுகாப்பின்மை, வேலைவாய்ப்பின்மை, கடன் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்ற 34 விதமான உலகளாவிய அபாயங்கள் பற்றி ஆராய்ந்து பேசப்பட்டுள்ளது.

இதில், குறுகிய காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்குள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயங்கள் வரிசையில் ”தவறான தகவல்களை பரப்புதல்” முதலிடத்தில் உள்ளது. இதே போன்று அடுத்த பத்து வருடங்களுக்குள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயங்களின் வரிசையில் ” தீவிர வானிலை நிகழ்வுகள்” முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2023-ஆண்டு வெளியான அறிக்கையில், அபாயங்களின் தரவரிசையில் 15 –ஆவது இடத்தில் இருந்த தவறான தகவல்களை பரப்புதல் தற்போதைய அறிக்கையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளதை பார்க்கும் போது, தவறான தகவல்களை பரப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், உலகளவில் தவறான தகவல்களை அதிகமாக பரப்புவதால் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உலக நாடுகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.